JULY 2025

 








 

July 2025

 அன்பின் மடல்


கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,  

சூரைச்செடி நிழலிலும் கப்பலின் அடித்தட்டிலும் தட்டி எழுப்புகிறவரும், மகிமையையும் சுரமண்டலத்தையும் விழித்தெழச் செய்கிறவரும், எழும்புகிறவர்களைப் பிரகாசிக்கச் செய்கிறவரும், உறங்காதவரும் 

தூங்காதவருமாகிய இஸ்ரவேலின் தேவனின் நாமத்தில் வாழ்த்துகள். (1இராஜாக்கள் 19:7; யோனா 1:6; சங்கீதம் 57:8; எபேசியர் 5:14; சங்கீதம் 121:4)

'விழித்தெழும் சபை" என்பது இம்மடலின் தலைப்பு. 

விழிப்பைப் பற்றி பைபிளில் முதல் குறிப்பு :- ஆதியாகமம் 9:24 ல் வருகிறது.'நோவா திராட்சை ரசத்தின் வெறி தெளிந்து விழித்தபோது, தன் இளைய குமாரன் தனக்குச் செய்ததை அறிந்து ..."

விழிப்பு அறிவைக் கொண்டுவருகிறது. தான் விழிப்பு இல்லாமல் இருந்தபோது, தனக்கு என்ன நடந்தது என்பது, விழிப்பின்போதுதான்

தெரியவருகிறது. நோவா வஸ்திரம் விலகிக் கிடந்தது, அவன் விழித்தபோது தான் அவனுக்குத் தெரிந்தது.

 வெளிப்படுத்தல் 3:17-18 'நீ நிர்வாணிமாய் இருக்கிறதை அறியாமல் எனக்கு ஒரு குறைவும் இல்லை என்றும் சொல்லுகிறபடியால்.. உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக் கொள்வதற்கு வெண்வஸ்திரங்களை என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும் வேண்டும் என்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்." 

எனக்கு ஒரு குறைவும் இல்லை என்று, விழிப்புள்ள சபை சொல்லாது. குறைவு உண்டு; ஆனாலும், கிறிஸ்து குறைவை நிறைவாக்குவார் என்று விழிப்பு சொல்லும்.

  1)எபேசு சபையின் குறை:- ஆதியில்  கொண்டிருந்த அன்பை விட்டது (வெளிப்படுத்தல் 2:4). 

 2)சிமிர்னா சபையின் குறை:- ஆவிக்குரிய தரித்திரம் (வெளிப்படுத்தல் 2:9).

3)பெர்கமு சபையின் குறை:- பிலேயாமின் போதகம் மற்றும் நிக்கோலாய் மதஸ்தரின் போதகம் (வெளிப்படுத்தல் 2:14,15).

4)தீயத்தீரா சபையின் குறை:-  யேசபேலின் வஞ்சகம் (வெளிப்படுத்தல் 2:25).

5)சர்தை சபையின் குறை:-  செத்த நிலை, நிறைவற்றக் கிரியைகள், அசுசிப்பட்ட வஸ்திரம் (வெளிப்படுத்தல் 3:2,4). 

6)பிலதெல்பியா சபையின் குறை:- கொஞ்சம் பெலன் (வெளிப்படுத்தல் 3:8). 

7)லவோதிக்கேயா சபையின் குறை:- வெதுவெதுப்பு, நிர்ப்பாக்கியம், பரிதாப நிலை, தரித்திரம், குருட்டுத்தனம், நிர்வாணம். 

பைபிள் கால சபையாகிய எபேசு சபையிலேயே குறை இருந்தது. மிகச்சிறந்த சபையாகிய பிலதெல்பியாவுக்கு பெலன் குறைவாக இருந்தது. 'தன் பிழைகளை உணர்கிறவன் யார்?"(சங்கீதம்19:12).

'எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்து அறிந்து..." நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நியாயம் தீர்க்கப்படோம்"(1கொரிந்தியர் 11:28,31).

சபை கூடுதலின் நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானதாகவும் பரிசுத்தமானதாகவும் கருதப்படுவது திருவிருந்து ஆராதனை. அதன் முக்கியமான அம்சம், தன்னைத்தானே சோதித்து அறிதலும், நம்மை நாமே நிதானித்து அறிதலும்.

வசனம் 28:- 'தன்னைத் தானே" என்பது தனிப்பட்ட நபரைக் குறிக்கிறது.

வசனம் 31:- 'நம்மை நாமே" என்பது முழு சபையையே குறிக்கிறது. சபை தனது நிறைகளையும், பிறரது குறைகளையும் மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பது, விழிப்பு இல்லை. 

பாரம்பரிய சபைகளின் நிர்வாகத்தில் உள்ள ஊழியக்காரர்களும் மற்றும் விசுவாசிகளும் எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்கிறார்கள். ஏனெனில்,

தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆகவே, இரண்டு அணிகள் உருவாகிறது. ஒருவரை ஒருவர் அரசியல்வாதிகளை விட மோசமாகத் தாக்கிக்கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் கூட எப்போதாவதுதான் நீதிமன்றத்தை அணுகுகிறார்கள். எந்த கட்சியையாவது, கட்சிக்கு சம்பந்தம் இல்லாத நீதிபதிகள் நிர்வகித்ததாக, வரலாறு உண்டா? ஆனால், இங்கு கிறிஸ்தவ சபைகளின் நிர்வாகத்தை கிறிஸ்தவர் அல்லாத நீதிபதிகள் நிர்வகிக்கிற நிலை. அவர்களிடமும்,

இரண்டு அணியினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி புகார்களைக் கொடுக்கிறார்கள். 

 ஒரு பாரம்பரிய சபையின், ஒரு மாவட்ட நிர்வாகம், அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட கணக்கு அறிக்கையின்படி, அதன் பத்தாண்டுகளுக்கான நீதிமன்றச் செலவு மட்டும் 55 கோடி ரூபாய். இது மாவட்ட நிர்வாகம் மட்டும் செலவு செய்த தொகை. அம்மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களும், சமூக சேவை நிறுவனங்களும், மருத்துவ அமைப்புகளும், நீதிமன்றங்களுக்குச் செலவு செய்தது இதில் அடங்காது. அதைவிட மோசமானக் காரியம், கோடி கோடியாக லஞ்சம் கொடுத்தது அந்தத் தொகையை விட மிக மிக அதிகம்.

 இந்தச்  செலவுகளுக்காக, சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள நிறுவனங்களில் பணியாளர் நியமனத்தின் போது, பல லட்சம் ரூபாய் பணம் வாங்குகிறார்கள். அதில் ஒரு சிறு பகுதி மட்டும், சபையின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு நன்கொடையாகக் கணக்கு வைக்கப்படுகிறது. பெரும்பகுதிப் பணம், கணக்கில் காட்ட முடியாத நீதிமன்றச் செலவுகளுக்கும், அரசு அதிகாரிகளுக்குக் கொடுப்பதற்கும் பயன்படுவதாகச் சொல்கிறார்கள். (அரசு அதிகாரிகள் வாங்குவதைவிட, வேலை  வாய்ப்புக்காக   நாங்கள்   குறைவாகவே  வாங்குகிறோம், என்கிற பெருமை வேறு).

 பல  ஆண்டுகள்  தற்காலிகப்  பணியில்  இருந்த  விதவை ஒருவர், தனது சொத்துக்களை விற்று பல லட்ச ரூபாய் வேலை வாய்ப்புக்காகத் தர முன்வந்தார். ஆனால், அதைவிட கால் பகுதி அதிக பணம் கொடுத்த ஒரு பணக்காரருக்கு, ஏல முறையில் அந்த வேலையைக் கொடுத்து விட்டார்கள்.

இந்த நடவடிக்கைகளில் விசுவாசிகள் மட்டுமல்ல ஊழியக்காரர்களும் பகிரங்கமாகவும் வெளியரங்கமாகவும் ஈடுபடுவது வேதனை. சபையே! கர்த்தர் உன்னை சவுக்கு எடுத்து விளாசுவதற்கு முன்பு, நீ பதவிப்

போதையில் இருந்தும், பணப் போதையில் இருந்தும் விடுபட்டு, விழிப்புள்ள சபையாக ஆகமாட்டாயா?

அச்சபையின்  தலைவர்களிடம்  இது குறித்து நான் விவாதித்துள்ளேன். நிர்வாகிகளை போட்டியின்றி தெரிந்தெடுப்பது, சீட்டுப் போட்டு தெரிந்தெடுப்பது, ஆகிய முறைகளை பின்பற்றலாமே என கருத்து தெரிவித்தேன்.

'வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்கள் இடத்தில் போகாமல் அநீதக்காரர் இடத்தில் போகத் துணிகிறது என்ன?

நீங்கள்  ஒருவரோடு  ஒருவர்   வழக்காடுகிறது எல்லா விதத்திலும் குற்றமாய் இருக்கின்றது. அப்படி செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தை சகித்துக்கொள்கிறது இல்லை? ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்கிறது இல்லை? (1கொரிந்தியர் 6 :1-7).

ஆவிக்குரியச் சபைகள் என்று அழைக்கப்படும் சுயாதீனச் சபைகளும் தங்கள் குறைகளை உணரவேண்டியது அவசியம். கணக்கு ஒப்புவிக்கும் நிலை மற்றும் பதில் சொல்லும் நிலை இன்றி, ஒரு ஊழியக்காரனே சர்வாதிகாரியாகத் திகழ்வது, வேதத்திற்கு ஏற்றதல்ல. பைபிள் கூட்டுத் தலைமையையும், குழு செயல்பாட்டையும் பரிந்துரைக்கிறது. 

'அப்பொழுது பேதுரு பதினொருவரோடும் கூட நின்று" (அப்போஸ்தலர் 2:14),

'அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து" (அப்போஸ்தலர் 6:2),

'அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள்" (அப்போஸ்தலர் 8:14),

'அந்தியோகியா பட்டணத்தில் உள்ள சபையில் பர்னபாவும் சிமியோனும் லூகியும் மனாயீனும் சவுலும் தீர்க்கதரிசிகளாகவும் போதகர்களாகவும் இருந்தார்கள்" (அப்போஸ்தலர் 13:1), 

பவுலும் சில்வானும் தீமோத்தேயுவும் தெசலோனிக்கே  சபைக்கு எழுதுகிறதாவது" (2தெச. 2:1).

ஒரு சுயாதீனச் சபையின் நிறுவனரும் மற்றும் தலைவருமாகிய ஊழியக்காரனின் குடும்பத்தில் பிரச்சனை. அதைப்பற்றி அவர் சபையாரிடம் தெரிவிக்கவில்லை. அதைப்பற்றி அறிந்த மூத்த ஊழியக்காரர்கள் அவரிடம் தொடர்புகொண்டபோது, 'இது எனது தனிப்பட்ட வாழ்வு, இதில் தலையிடாதீர்கள்", என்று கூறிவிட்டார். தனது குடும்பப் பிரச்சனையை அவர் அணுகிய முறை, வசனத்துக்கும் சமூகத்துக்கும் முரணான ஒன்று. அது சபை ஆராதனையில் வெடித்தது, இந்த சபை நடக்காமல் மூடப்பட்டுவிட்டது.

வசனத்துக்கும், சமூகத்துக்கும், சட்டத்துக்கும் முரணான அணுகுமுறையைக் கையாண்டுவிட்டு, 'கர்த்தர் என்னோடு இருக்கிறார், என்னைப் பற்றி பேசுகிறவர்களைக் கர்த்தர் அடிப்பார்" என்று பகிரங்கமாகத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார். யாருக்கும் பதில் சொல்லவோ, தேவ மனிதர்களின் ஆலோசனையைக் கேட்கவோ அவர் ஆயத்தமாய் இல்லை. அது ஒரு தனி நபரின் காரியமோ, குடும்பத்தின் காரியமோ அல்ல, சபையின் பிரச்சனை. ஒரு தனிப்பட்ட ஊழியக்காரரைப் பற்றியது அல்ல. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இது போன்ற பல சபைத் தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இவர் ஒரு அடையாளம்.

 இரண்டாவதாக,

 'அவர்களால் (கீழ்ப்படியாமையின் பிள்ளைகளால்) ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாய் இருக்கிறதே.

 ஆதலால், தூங்குகிற நீ விழித்து மரித்தோரை விட்டு எழுந்திரு. அப்போது கிறிஸ்து உன்னை பிரகாசிப்பிப்பார் என்று சொல்லியிருக்கிறார். (எபேசியர் 5 :12-17) 

விழித்த பிறகு செய்யவேண்டியது எழும்புவது. அதையே 'எழுப்புதல்" என்று அழைக்கிறோம். 'கிறிஸ்துவுக்குள் பிரகாசிப்பது" என்று அதற்கு அவ்வசனம் விளக்கம் கூறுகிறது.

 எழுப்புதல் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் எல்லாரும் வாஞ்சித்து கதறுகின்ற ஒரு கனவு. ஆனால், எழுப்புதலுக்கு கொடுக்கப்படுகிற  வியாக்கியானமே வேறுபடுகிறது.

எபேசுவில் ஏற்பட்ட எழுப்புதல் அப்போஸ்தலர் 19-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது:-

1) அது 12 விசுவாசிகளிலிருந்து ஆரம்பிக்கிறது. பரிசுத்த ஆவியைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப்பெற்றார்கள்.(வசனம் 1-7)

2)யூதர்கள் நடுவே பிரசங்கிக்கப்பட்டு, ஒரு கூட்டம் மக்கள் சீஷராக்கப்படுகிறார்கள். (வசனம் 8-9) எல்லா யூதரும் அல்ல. 

3)2 வருஷ காலத்தில் அப்பகுதியில் குடியிருந்த எல்லாரும் வசனத்தை கேட்டார்கள். (வசனம் 10) எல்லாரும் இரட்சிக்கப்படவில்லை, பலர் இரட்சிக்கப்பட்டார்கள்.

4)அற்புதங்கள் நடந்தன, வியாதிகளும் பொல்லாத ஆவிகளும் நீங்கின. (வசனம் 11- 12)

5)மந்திரவாதிகளும் இயேசுவின் நாமத்தைப் பயன்படுத்துகிற அளவுக்கு தேவ நாமம் மகிமைப்பட்டது (வசனம் 13-7). ஆனால், மந்திரவாதிகள் மனம் திரும்பவில்லை.

6)மாய வித்தைக்காரர் இரட்சிக்கப்பட்டு பகிரங்கமாக அறிக்கையிட்டார்கள். (வசனம் 18-20)

7)விக்கிரக ஆராதனை குறைந்துபோனது. (வசனம் 24-27) ஆனால், பட்டணத்தில் கலவரம் பண்ணுகிற அளவுக்கு விக்கிரக ஆராதனைக்காரர்கள் இருக்கவே செய்தனர்.

 'இந்த எழுப்புதல் மைனர் ஆசியா பகுதியில் மட்டுமே நடந்தது. உலக அளவில் நடக்கவில்லை.

'கிபி 100 வாக்கில், யோவான் வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதும்போது, எபேசு சபை ஆதி அன்பை இழந்திருந்தது. எனவே எழுப்புதல் நிரந்தரமானது அல்ல. (வெளிப்படுத்தல் 2 :4)

'கடைசி கால எழுப்புதல் என்பது உலகளாவியதும் அல்ல, நிரந்தரமானதும் அல்ல. 

'(மத்தேயு 24:14)" ராஜ்ஜியத்தினுடைய இந்த சுவிசேஷம் பூலோகம் எங்கும் உள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும். அப்பொழுது முடிவு வரும்.

இவ்வசனத்தின்படி மனுக்குலம் முழுமைக்கும் நற்செய்தி அறிவிக்கப்படுகின்ற போது பெரிய சுவிசேஷமயமாக்கல் நடைபெறும். இது 18 வது மற்றும் 19 வது நூற்றாண்டுகளில் மிஷனரி ஊழியங்களின் எழுச்சியாக உலக அளவில் தொடங்கியது. இதை சபை வரலாற்றாளர்கள் 'பெரிய விழிப்புணர்ச்சி" (புசநயவ யுறயமநniபெ ) என்று அழைக்கிறார்கள்.

 '(அப்போஸ்தலர் 8:4) சிதறிப் போனவர்கள் எங்கும் திரிந்து சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்.

 (அப்போஸ்தலர் 11:19-20) ஸ்தேவான் நிமித்தமாய் எழும்பின உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் சுவிசேஷ வசனத்தை யூதருக்கே அன்றி, மற்ற ஒருவருக்கும் அறிவியாமல் பெனிக்கே நாடு, சீப்புருத்தீவு, அந்தியோகியா பட்டணம் வரைக்கும் சுற்றித் திரிந்தார்கள். அவர்களின் சீப்புரு தீவாரும் சிரேனே பட்டணத்தருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்திற்கு வந்து, கிரேக்கருடனே பேசி, கர்த்தராகிய இயேசுவைக் குறித்துப் பிரசங்கித்தார்கள்."

 வரலாற்றில் சமீபத்தில் நடைபெற்ற எழுப்புதல். அசூசா தெரு எழுப்புதல். அது அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் 1906 லிருந்து 1915 வரை நடைபெற்றது. இரட்சிப்பு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மற்றும் பரிசுத்தமாக்கப்படுதல், என்பதே இந்த எழுப்புதலின் மையப் புள்ளிகள். அந்நியபாஷை பேசுதல், அற்புதங்கள், தெய்வீகச் சுகங்கள் ஆகியன சேர்ந்துகொண்டன. இந்த எழுப்புதல் தீயை ஒரு ஆஸ்திரேலியா 

மிஷனரி இலங்கைக்குக் கொண்டுசென்றார். அப்பொழுது அங்கிருந்த இந்திய மிஷனரி பால் ராமன் குட்டிக்கு அது பரவியது. அவர் அதை கேரளாவுக்கு எடுத்து வந்தார். அதுதான் தி பெந்தேகோஸ்தே  மிஷனின்  துவக்கம். பெந்தகோஸ்தே சபைகள் இந்தியாவில் வருவதற்கு அந்த இரண்டு மிஷனரிகளும், பின்னால் இந்தியாவுக்கு வந்த அமெரிக்க ஏஜி மிஷனரியும், சர்ச் ஆப் காட் அமெரிக்க மிஷனரியும் காரணமானார்கள். மிஷனரிகளால் இந்தியாவில் மூட்டப்பட்ட பெந்தேகோஸ்தே அக்கினியை,  பெரிய கட்டடத்துக்குள்ளும், மெகா சபைக்குள்ளும் அடக்கி வைக்கலாமா? சிறிய நெருப்பு பெரிய காட்டைக் கொளுத்துவதற்கு, 'மிஷனரி பணி" என்னும் தீப்பந்தம் தேவை! தேவை!! 

 ஜெபம் அடிப்படை. ஆனால் ஜெபம் மட்டும் போதாது. போ, சீஷராக்கு, ஞானஸ்நானம் கொடு, உபதேசம் பண்ணு என்பது மகா கட்டளையின் நான்கு அம்சங்கள். உபவாச ஜெபம், இரவு ஜெபம், 10 நாள் ஜெபம், 21 நாள் ஜெபம், 40 நாள் ஜெபம், 50 நாள் ஜெபம், ஓராண்டு ஜெபம், ஆயிரம் நாள் ஜெபம், சங்கிலி ஜெபம், காணொளி ஜெபம் என்று சபை என்னும் விமானம் தரையிலேயே ஓடிக்கொண்டிருந்தால் போதுமா? அது மேல் எழும்பிப் பறக்கவேண்டாமா?

 சபையே கூடி களித்தது போதும்.  ஜெபித்ததற்கு பதிலை பெறுவதற்கு, போய் அறிவி. கற்றதைக் கண்டடைய எழும்பி ஆத்துமாக்களைத் தேடு.


 சபையே நீ பாய்ந்தால் பாலசிங்கம்

 மடங்கிப் படுத்தால் கிழவரின் சங்கம்

 விழி - எழு வேட்டையாடு எங்கும்

 ஒளி வந்தது வழி பிறந்தது பொங்கி எழு


 விழித்தெழும்பி பாடு சிறைக் கதவு திறக்கும்

 சிறையாக்கினோர் மீது சிலுவைக் கொடி பறக்கும்

 பணம் பிள்ளைகள் கனவு வருவது உறக்கம்

 தேவசாயலின் தரிசனம் வந்தால்தான் சிறக்கும்


 வீணை போன்ற மனமே விழி சீக்கிரம்

 ஜாதி ஜனங்களுக்குள் நீ அறிவிக்கும் பாத்திரம்

 தேவ சமூகத்தில் நித்தம் விழித்திரு

 எங்கு போக வேண்டும் என்று அறிந்திடு


 கண்ணீரின் ஊழியத்தை கருத்துடன் நினைத்திடு

 வாங்குவது பாக்கியமல்ல தாங்கிடு கொடுத்திடு

 பாவ மயக்கம் விடு நீதியிலே விழி 

 தெளிந்திடு அறியாதவரைப் பற்றி புரிந்திடு 


 விசுவாசத்தில் விழித்திடு விடாமல் நிலைத்திடு

 வளர்ந்திடு வலுப்பெறு திடமாக நிமிர்ந்திடு

 நான்கு பேரை நடத்திடு நாதரைப் போல் ஆக்கிடு

 உத்தரவாதம் தந்திடு உற்சாகமாய்ச் செய்திடு 


 கெட்டச் சிங்கம் என கெர்ச்சிக்கும் சத்துரு

 சுற்றுவது விழுங்கவே தெளிவுடன் விழித்திரு

 செத்தக் கிரியை சரியாக்கு சீராக்கு

 கள்ளனைப் போலக் கர்த்தர் வருகிறார் விழித்திரு.


                    அன்பரின் அறுவடைப் பணியில்

                    அன்பு சகோதரன் M. பிரைட் கென்னடி


June 2025

அன்பின் மடல்


கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,  

'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை" (மத். 16:18)என்று வாக்களித்தவரும், மூலைக்குத் தலைக்கல்லாகவும் (சங். 118:22) மற்றும் பிரதான மூலைக்கல்லாகவும்  (1 பேதுரு 2:7; எபே. 2:20) அறியப்பட்டவரும், பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் (சக. 4:7) என்றும், கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தி, அவாந்தரவெளியிலே தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுகின்ற ஜனங்களால், 'பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடு முரடானவைச் சமமாக்கப்படும்" (ஏசா 40:3,4) என்றும்  தலைக்கல்லைக் கொண்டுவரும் ஜனங்களைக் குறித்தும் மற்றும் அவர்கள் மூலமாக வெளிப்படவிருக்கும் வல்லமையைக் குறித்தும் முன்னுரைத்தவருமாகிய ஆண்டவரின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்!

பிரியமானவர்களே! அவரை மாத்திரம் தலைக்கல்லாகவும் மூலைக்கல்லாகவும் வைத்துவிட்டு அகன்றுபோய்விடுபவர்களாக அல்ல, 'மனுஷரால்தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும், ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்" (1பேதுரு 2:4,5) என்று நாமும் அவரோடுகூட இணைத்துக் கட்டப்படுவதனை பேதுருவின் மூலமாக அவர் நமக்கு எழுதித்தந்திருக்கின்றாரே!

'இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்" (யோவான் 2:19) என்று, ஆலயத்தை தன்னுடைய சரீரத்தோடு ஒப்பிட்டுப் பேசும் இயேசு கிறிஸ்து (யோவான் 2:21), பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன் என்றும், நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன் (யோவா 17:21,22) என்றும் தன்னோடு நம்மையும் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு எத்தனை நெகிழ்ச்சியானது! இதனையே,  அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம் (ரோமர் 12:5) என்று வாசிக்கின்றோம். சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார் (1கொரி. 12:12) என்று தலையாகிய கிறிஸ்துவை முன்னிறுத்தி, அவயவங்களாக நம்மை அவருடன் அடையாளப்படுத்தப்படும் பாக்கியம் பெற்றவர்கள் நாம் என்பதில் எத்தனை ஆனந்தம்! 

இச்சத்தியத்தினையே பவுலும், போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது என்றும், ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால் (1கொரி. 3:11,12) என்றும் பல்வேறு தரமும் மற்றும் தன்மையுமுடையவர்களாக இணைக்கப்படும் ஜனங்களைக் குறித்தும் குறிப்பிட்டு எழுதுகின்றார். அப்படியிருக்க, பிரியமானவர்களே! மூலைக்கல்லாகிய அவர் மீது கட்டப்பட்டுவரும் நமது தரம் தாழ்ந்துவிடக்கூடாதே! அது கட்டிடத்தைத் தகர்ந்துவிழச்செய்துவிடக்கூடாதே! ஒருவன் கட்டினது நிலைத்தால்... என்றும், ஒருவன் கட்டினது வெந்துபோனால்... என்றும், அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும் (1கொரி. 3:14,15) என்றும் பவுல் எழுதும் வரிகள், கட்டினவனின் கவலையீனத்தையும், அவன் ஆத்துமா கஷ்டப்பட்டுக் கரை சேர்த்ததையும்தானே சுட்டிக்காட்டுகின்றது. பிரியமானவர்களே! தரமற்ற மனிதர்கள் உட்புகுந்ததுதானே, அநேக சபைகளும் மற்றும் ஊழியங்களும் தாழ்த்தப்பட்டு, அஸ்திபாரத்துடன் மாத்திரமே தப்பி நிற்பதற்குக் காரணம். எனவே, அக்கினிப் பரீட்சையின்போது, அஸ்திபாரம் மட்டுமே மீந்திருக்கும் நிலை ஏற்பட்டுவிடாதபடி எச்சரிக்கையாயிருப்போம்.   

'இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை" (சங். 121:4) என்பதை அறிந்திருந்தபோதிலும்,  தலையாகிய அவர் விழித்திருக்கும்போதே, செயல்பட்டுக்கொண்டிருக்கும்போதே, தலைக்கல்லாகிய அவர் மீது தலைவைத்து ஆறுதலடைவதையும் மற்றும் இளைப்பாறுவதையுமே அங்கங்களாக இணைக்கப்பட்டிருக்கும் அநேகர் விரும்புவதினால், அங்கங்களின் ஆழ்ந்த உறக்கம் முழுச்சரீரத்தையும் அதாவது சபையையும் செயலற்றதாக்கிவிடப் போதுமானதல்லவா! அதுமாத்திரமல்ல, உறக்கம், மயக்கம், உணர்வற்ற நிலை என்ற படிப்படியான வீழ்பரிமாணங்களைத் தொடர்ந்து, தலையாகிய கிறிஸ்துவையே தலைவாசலுக்கு வெளியே தள்ளி, சரீரமாகிய முழுச்சபையையும் மரணத்திற்கு நேராகவும் வழிநடத்திவிடும் ஆபத்தும் தூரத்திலில்லை என்பதும் நமது காதுகளில் தொனிக்கவேண்டிய எச்சரிப்பின் செய்தியல்லவா!  

பிரியமானவர்களே! நம்முடைய ஆவிக்குரிய உறக்கம், தேவனை நம்மூலமாகச் செயலாற்றமுடியாதபடிச் செய்துவிடும். 'மனுர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான். பயிரானது வளர்ந்து கதிர்விட்ட போது, களைகளும் காணப்பட்டது. வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது" என்று கேட்டபோது, 'சத்துரு அதைச் செய்தான்"  (மத் 13:25-28) என்று வாசிக்கின்றோமே! இன்றைய நாட்களில், இப்படிப்பட்ட நிலை சபைகளில் உண்டாகாமலில்லையோ? சபைகளுக்குள் காணப்படும் களைகளுக்குக் காரணம், கண்ணயர்ந்துத் தூங்கிவிட்ட காவலர்களாகிய மனுஷர்தானே! உறக்கம் சத்துருவை உள்ளே ஊடுருவச்செய்துவிட்டதே! 'மனுஷர் நித்திரைபண்ணுகையில்" என்ற வார்த்தைகள், சபையின் ஊழியர்களை மாத்திரமல்ல, சபையின் அங்கங்களாகிய ஒவ்வொரு மனு~ரையும் உள்ளடக்கியிருக்கின்றது என்பதையும் நம்மால் உணர்ந்துகொள்ளமுடிகின்றதல்லவா! 

மேலும், கண்ணயர்ந்ததினால் உட்புகுந்துவிட்ட களைகளை, வேலைக்காரர்களின் கைகளினால் அகற்றுவதும் வீட்டெஜமானுக்குக் கடினமாகிவிடுகின்றதே! 'வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்" (மத். 13:29) என்று வீட்டெஜமானால் வேலைக்காரர்கள் தடுக்கப்பட்டு, 'அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன்" (மத். 13:30) என்று வீட்டெஜமான் சொல்லுகிறதையும், அறுக்கிற பணிக்காக தேவதூதர்கள் நியமிக்கப்படுகிறதையும் (மத். 13:39) வேதத்தில் வாசிக்கின்றோமே. 

வேலைக்காரர்களுக்குப் பதிலாக, தேவதூதர்கள் நியமிக்கப்படுவதற்கான காரணம் என்ன? வேலைக்காரரிடத்தில் காணப்பட்ட வேறுபிரித்துப் பார்க்கும் திறனின் குறைபாடுதானே! அதனால்தானே, 'அவர்கள் களைகளைப் பிடுங்கும்போது, கோதுமையையுங்கூட பிடுங்கிவிடுவார்கள்" என்று எஜமான் பயப்படுகின்றார். அப்படியிருக்க, வேலிக்குள் சத்துரு வந்ததற்கும் மற்றும் அவனால் களைகள் விதைக்கப்பட்டதற்கும்கூட காரணம் இதுதான் என்பது இதன் மூலம் தெளிவாகின்றதல்லவா! 'வீட்டெஜமான் விதைத்த நல்ல விதைகளோடு, சத்துரு விதைத்த களைகளுக்கும் சேர்த்து வேலைக்காரர்கள் தண்ணீர் பாய்ச்சி, உரம் போட்டு வளர்த்தது" எத்தனை வேதனை? 'நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு" என்றும், 'என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள்" என்றும்,  'அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்குமுன்னே இருந்த "மூப்பரிடத்தில் துவக்கம் பண்ணினார்கள்" (எசே. 9:4,6) என்றும் எழுதப்பட்டிருப்பதற்கான கரணம் இதுதானோ? இதைத்தானே பேதுருவும், 'நீயாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?" (1பேதுரு 4:17,18) என்று எழுதுகிறார். அப்படியென்றால், 'சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள்" தேவனுடைய வீட்டிலும் இருக்கின்றார்களோ?

எனவே, பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள் (1யோவான் 4:1)என்ற அப்போஸ்தலனாகிய யோவானின் ஆலோசனை சபைக்கு எத்தனை அவசியமான ஒன்று. 

அதுமாத்திரமல்ல, 'பயிரானது வளர்ந்து கதிர்விட்ட போது, களைகளும் காணப்பட்டது" என்ற வார்த்தைகள், பயிர்கள் கதிர்விடும்வரை, அவர்களால் களைகளை அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை என்பதைத்தானே வெளிப்படுத்துகின்றன. நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது;  கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் (மத். 7:18,20) என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றாரே! மனுஷருடைய உறக்கத்தினால் உள்ளே நுழைந்துவிட்ட களைகள், மரங்களைப்போல உயர்ந்துவிட்ட நிலை சபைக்கு எத்தனை ஆபத்தானது? களைகளாய் சபைக்குள் நுழைந்து, முதன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு போன்றவர்கள், அவருடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனவர்களைக்கூட ஏற்றுக்கொள்ளாமல், தடைசெய்து, சபைக்குப் புறம்பே தள்ளிவிடுவார்களே! (3 யோவான் 7-10)

இன்றைய நாட்களிலும், கண்ணயர்ந்து, களைகளை சபைக்கு உள்ளே உலாவவிட்டு, பின்னர் அவைகளைக் களைய முற்பட்டு, இறுதியில் கோதுமை மணிகளையும் இழந்து நிற்கும் சபைகள் உண்டல்லவா! மனுஷரின் உறக்கம் மற்றும் விழித்திராமை, 'கடைசி வரை அதாவது நியாயத்தீர்ப்பு வரை அச்சபையினை கதிர்களையும் மற்றும் களைகளையும் உள்ளடக்கிய சபையாக" மாற்றிவிடுவது எத்தனை வேதனையானது? 'தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்" (1பேதுரு 5:8) என்ற எச்சரிப்புடன் சபையின் தூதர்களாகிய தலைவர்கள், மூப்பர்கள், மேய்ப்பர்கள் மற்றும் சபை மனிதர்கள் காணப்பட்டால், சபையில் தேவதூதர்களின் களையெடுக்கும் பணி அவசியமற்றதாகிவிடுமே! 

'எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும்; இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயதமணிந்தவனைப்போலவும் வரும்" (நீதி. 6:9-11) என்ற சாலொமோனின் வார்த்தைகள் நமக்கு எச்சரிக்கையாகத்தானே எழுதித்தரப்பட்டிருக்கின்றன. இன்றைய நாட்களில், 'ஆவிக்குரிய தரித்திரத்தையும், வறுமையையும்" அநேக சபைகள் அனுபவித்துக்கொண்டிருப்பதற்குக் காரணம் இதுதானே! 'நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும், சொல்லுகிறபடியால்; நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்" (வெளி. 3:17,18) என்று லவோதிக்கேயா சபைக்குச் சொல்லப்பட்டதைப்போலத்தானே, இத்தகைய சபைகளுக்கும் சொல்லப்படவேண்டும். 

பகட்டான கட்டிடம், வானளாவிய உயர்ந்த கோபுரம் மற்றும் வண்ண வண்ண மின்விளக்குகளுடனான அலங்கரிப்பு என வெளித்தோற்றத்தில் மிளிர்ந்துகொண்டிருக்கின்றபோதிலும், ஐசுவரியமான சபையைப்போலக் காட்சியளித்துக்கொண்டிருந்த போதிலும், பல சபைகளில் உள்ளிருப்போரின் நிலையோ உருக்குலைந்து காணப்படுகின்றதே! 'மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்" (மத். 23:27) என்ற நிலைதான் இப்படிப்பட்ட சபைகளுக்கும் பொருந்திப்போகிறதோ! 

இன்றைய நாட்களில், தன்னோடு இருப்பவரையும், தன்னுடைய பெலத்தையும் மற்றும் தான் பண்ணவேண்டிய பிரயாணத்தின் தூரத்தையும் அறிந்துகொள்ளாததே அநேக சபைகளைப் பெலவீனப்படுத்தியும் மற்றும் பயப்படுத்தியும் வைத்திருக்கிறது. யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களின் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால் தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னபோது, எலியா வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம்போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான் என்றும், ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்று சொல்லி, தழலில் சுடப்பட்ட அடையையும், பாத்திரத்தில் தண்ணீரையும் அவனது தலைமாட்டில் கொண்டுவந்து வைத்தபோதிலும், அவன், புசித்துக் குடித்துத் திரும்பப்படுத்துக்கொண்டான் (1இராஜா. 19:2,4,5,6) என்றும் வாசிக்கின்றோமே! 

இன்றைய நாட்களில், அநேக சபைகளின் நிலை இப்படிக் காணப்படவில்லையோ? உறங்கிக்கொண்டிருக்கும் சபைகளை தட்டியெழுப்பவும், அவைகளுக்கு முன், 'அப்பத்தையும், தண்ணீரையும்" வைத்து, சபையே, 'நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்" (1இராஜா. 19:7) என்று அவைகளைச் செயல்படச்செய்யவும், அநேக ஊழியர்களை சபைகளுக்கு தேவன் அனுப்பிக்கொண்டேயிருக்கின்றபோதிலும், 'கூட்டங்கள் நடைபெறும்போது மாத்திரம், கரங்களைத் தட்டி, அந்நியபாஷைகளைப் பேசி, ஆவியில் நிறைந்து, ஆர்ப்பரித்து, ஆவிக்குரிய ஆகாரங்களைப் புசித்துக் குடித்து, திரும்பவும் படுத்துக்கொள்ளுகிறது சபை". 

மேலும், 'சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்" என்று தங்களது பழைய அனுபவத்தையே பேசிக்கொண்டும், 'நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள்" (1இராஜா. 19:10) என்று தங்கள் தற்கால பயத்தையும் கூடவே வெளிப்படுத்திக்கொண்டும் இருக்கின்ற சபைகள் எத்தனை! எத்தனை!! 'பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்" (1இராஜா. 19:18) என்று தேவன் சொன்னபோதிலும், 'அந்த ஏழாயிரம் பேரோடுகூட நானும் இஸ்ரவேலிலே இருப்பேன்" என்றும், அவர்களோடு இணைந்து நானும் இஸ்ரவேலின் தேவனுக்காகச் செயல்படுவேன் என்றும் தனக்குள் தைரியத்தை வரவழைத்துக்கொள்வதற்குப் பதிலாக, தனக்கு மாற்றான ஏர் பூட்டி உழுத எலிசாவைத்தானே உடனே தேடிச்சென்றான் எலியா! எலியா மரிப்பதை தேவன் விரும்பாததினால்தான், அவனை சுழல்காற்றிலே எடுத்துக்கொண்டாரோ? அவ்வாறே சபையின் மரணத்தையும் விரும்பாததினாலேயே, சபையையும் எடுத்துக்கொள்ளவிருக்கின்றாரோ?

ஆயிரமாயிரமாய் ஜனங்கள் நரகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்க, 'தங்களுடைய ஆவியின் அனுபவங்களிலும், ஆசீர்வாதங்களிலும்" திளைத்தவர்களாக இருந்த இடத்திலேயே இருந்துவிட நினைக்கும் சபையை நோக்கி, 'இங்கே உனக்கு என்ன காரியம்" (1இராஜா. 19:9) என்ற சத்தம் இன்றைய நாட்களில் தொனிக்கட்டும். அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும், குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா? தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத். 12:5,6) என்ற சத்தியத்தை இன்றைய நாட்களில் சபைகள் புரிந்துகொள்ளட்டும்.

பாலசிங்கத்தை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டவன் சிம்சோன் (நியா. 14:6), முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடே வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டி, பந்தங்களைக் கொளுத்தி, பெலிஸ்தரின் வெள்ளாண்மையிலே அவைகளை ஓடவிட்டு, கதிர்க்கட்டுகளையும் வெள்ளாண்மையையும் திராட்சத் தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும் சுட்டெரித்துப் போட்டவன் (நியா. 15:4,5), பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடேகூடப் பேர்த்து, தன் தோளின் மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்துகொண்டுபோனவன் அவன் (நியா. 16:3); என்றபோதிலும், தவறான இடத்தில் அவன் தலைவைத்து நித்திரைசெய்ததினால், அவனது தலை (பெலன்) சிரைக்கப்பட்டுப்போயிற்றே! (நியா. 16:19). தவறானவர்களின் உறவினாலேயே, அவர்களது குடையின் கீழ் சபை நித்திரைசெய்வதினாலேயே இன்றைய நாட்களில் அநேக சபைகளில் 'தலை (பெலன்) சிரைக்கப்பட்டுவிட்டது"; அதாவது தலையாகிய பெலனாகிய கிறிஸ்து அகற்றப்பட்டுவிட்டார் என்பது நாம் அறிந்துகொள்ளவேண்டிய செய்தியல்லவா! சிம்சோனின் உயிர் மீது அல்ல, அவனுக்கும் தேவனுக்கும் இடையிலான உடன்படிக்கையின் மீதல்லவா முதலில் கத்தி வைக்கப்பட்டது! பெலமுள்ள சபையை 'மற்ற மனுஷரைப் போல ஆக்க" சத்துரு எடுக்கும் முயற்சிக்கு சபையே எச்சரிக்கையாயிருக்கவேண்டுமே!!

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் (2பேதுரு 3:9) என்பதை சபை எண்ணினால், ஆத்தும ஆதாயப் பணியில் அல்லவோ அது தீவிரப்படவேண்டும்; மாறாக, 'மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்" (மத். 25:5) என்ற நிலைக்கு சபை தள்ளப்பட்டுவிடாதபடிக்கு கர்த்தர் நம்மைக் காப்பாராக; கிருபை உடனிருக்கட்டும்! 


காக்கும் மனுஷர் நித்திரை செய்ததினால்

களைகளைச் சத்துரு விதைத்துவிட்டானே!

வேறுபிரிக்கும் திறனும் இல்லாதே போனதினால் 

வேலிக்குள்ளும் களைகள் விதைகளாய் வந்துவிட்டதே!


கண்ணயர்ந்து சபை தூங்கியே போனதினால்

கண்ணெதிரே களைகளும் மரமாக மாறிற்றே!

விழித்திராமல் சபை நித்திரை செய்ததினால்

வறுமையும் தரித்திரமும் விருந்தாளிகள் ஆயிற்றே!


தரமற்ற மனிதர் திரளா யுட்புகுந்ததினால்

தரைமட்டும் கட்டியவைகளும் தகர்ந்தே போயிற்றே!

தகிக்கும் தீயொருநாள் தாங்காது போய்விட்டால்

தப்பி நிற்கும் மீதமாய் அஸ்திபாரம் மாத்திரமே!


வருகை இன்னும் தாமதிப்பதின் காரணம்

விளக்கை அணைத்து நாம் தூங்குவதற்கல்ல

பிரயாணம் இன்னும் வெகு தூ......ரமிருக்க

படுத்திருந்து நித்திரை செய்வது நியாயமுமல்ல

                                                                            அன்பரின் அறுவடைப் பணியில்

                                                                                   P. J. கிருபாகரன்


May 2025

 

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,  

'தம்முடைய பராக்கிரமத்தினைக் காட்டும் நாளுக்காக ஆயத்தப்படும் ஆண்டவர், அதனை உடனிருந்து நிறைவேற்றத்தக்க, மனப்பூர்வமான, பரிசுத்த அலங்காரத்தினை அணிந்த, விடியற்காலத்துப் பனியைப் போல அமைதியாய் இறங்கி ஆர்ப்பாட்டமில்லாமல் தங்களுடைய பணியை அழகாகச் செய்துமுடிக்க வல்ல யௌவன ஜனத்தினை (லழரபெ pநழிடந) எழுப்பிக்கொண்டிருக்கும் வேளையில் வாழ்ந்துகொண்டிருக்கும் உங்களை ஆண்டவரின் நாமத்தில் வாழ்த்துகிறேன் (சங். 110:3). அதனை உணர்த்தும் வண்ணமே நான், நம்மைக்கொண்டு தேவனால் GENEXT ஆரம்பிக்கப்பட்ட (தூத்துக்குடி - சாயர்புரம், சிக்காரியா - பீஹார், லவோலா - மகாராஷ்டிரம்) நேரத்தில் பாடலாக எழுதி YOUTUBE-ல் வெளியிட்டேன். 

தேவ சேனை ஒன்று எழும்புகிறதே

உந்தன் சேவைக்கென்று கிளம்புகிறதே

உம் பராக்கிரம நாட்கள் இதுவே

உம் யௌவன ஜனம் வெளிப்படுதே

சிலுவை நாதரின் இரத்தம் வீணாகிவிடக்கூடாதே

சிந்திய பரிசுத்த இரத்தம் போதுமே மீட்டிடவே

சிதறி நிற்கும் மாந்தரையும் 

மீட்டிடவே இணைத்திடவே

சேனையாய் எழும்பப் போதிடுமே ...

இந்தப் பாடலை இன்று அநேகர் தங்களுடைய பாணியில் YOUTUBE-ல் பயன்படுத்துவதனைக் கண்டு உள்ளத்தில் உவகைகொள்ளுகிறேன். செயல்படத்துடிப்போரை தேவன் எழுப்பிக்கொண்டுவருகிறார். 

அடுத்தாற்போல், திண்டிவனத்தில் (4 Km - புதிய பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து) இன்னுமொரு பயிற்சி சாலையை உருவாக்கிவருகிறோம். சென்னையிலிருந்து - திருச்சி வரை உள்ள சபைகளுக்கும், பாண்டிச்சேரிப் பகுதியின் சபைகளுக்கும் பிரயோஜனமாக இது அமையும். கர்நாடகத்தில் மற்றவரின் துணையோடு ஒன்று ஆரம்பிக்கப்பட வழி திறந்துள்ளது. 

தேவனுடைய நேரத்தில் தேவனோடு இணைந்து செயல்படுவோராக நம்மை தேவ ஆவியானவர் மாற்றி, வேகமாக உபயோகிப்பாராக. 

ஆனால், இன்றைய தமிழ் பேசும் ஆவிக்குரிய சபைதனில் நடப்பவை நம்மை அதிரச்செய்கின்றன. செயல்படவேண்டியவரில் பலர் திசைதிருப்பப்பட்டுள்ளனர். பெரிய கட்டிடங்களை எழுப்பி MEGA - சபைகளை உருவாக்கும் தீவிரம் தேவ திட்டமே அல்ல என்று என்னால் அடித்துச்சொல்ல முடியும். அதனைச் செய்வதனை, அதற்கு உபயோகப்படும் மனித சக்தியும் (Human power), பணச் செலவும் (Monetary resources), மக்களின் பிரயாண நேரமும், வாராவாரம் குடும்பமாக வந்துபோகும் செலவுத் தொகையும், நேரமும் தேவ இராஜ்யத்தின் சொத்தில் வீணாகச் செலவழிக்கப்படுகிறது. இதற்குக் காரணமானவர்கள் யாவரும் அவருடைய பராக்கிரமத்தின் நாளில் கணக்குக்கொடுக்கவேண்டுமே. தலைவர்களே! இதனை உணர்ந்தது உண்டோ? 

சீனாவினை நாம் சீக்கிரத்தில்  எல்லா நிலையிலும் முந்திவிடுவோம் என்கிறார் நம்முடைய பாரதப் பிரதமர். ஆனால், எல்லா வரியும் (TAX) சீனாவைக் காட்டிலும் நம் நாட்டில் 2 மடங்கு விதிக்கப்படுகிறது. சீனா எல்லாத் துறைகளிலும் முந்தியே நிற்கிறது. கூடவே, லஞ்சம் இல்லாமல் இருப்பதால், ரோடுகள் பளிங்கு போலவும், பாலங்களும், போக்குவரத்துத் துறையும் மற்றும் உபயோகிக்கும் அத்தனை உபகரணங்களும் எந்த நாட்டையும் மிஞ்சும் விதத்திலேயே சீனாவில் உள்ளது. (பீஹாரில் ஒரே மாதத்தில் 13 பாலங்கள் விழுந்தன). 

நிச்சயம் நாம் சீனாவை எப்பொழுதோ முந்திவிட்டது உண்மை. ஜனத்தொகையில் 70% 35 வயதிற்குக் கீழ் என்ற உண்மை, நம் நாட்டினை இளம் நாடாக உலகம் பார்ப்பதற்கு (Young Country) ஏற்றதாக அமைந்துள்ளது. ஆனால், அந்த இளைஞர்களைக் குறித்தக் கவலைதான் அரசாங்கத்திற்கு அதிகம் இல்லை. ஆனால், பரிதாபம் என்னவென்றால், உப்பாக, ஒளியாகத் திகழவேண்டிய தேவ சபைக்கும் கவலை இல்லை.

புலம்பல் புத்தகத்தின் 4-ம் அதிகாரம், இளைஞர்கள் (Young People) ஒளியிழந்து (புல. 4:1), பொன்பாண்டங்களாய் இருக்கவேண்டியவர்கள் மண்பாண்டங்களாக மதிப்பிழந்துக் காணப்படும் காட்சியைக் காட்டுகிறது (புல. 4:2). தாகத்தால் (தாகம் தீர்க்கப்படாததால்) (யோவா. 4:13,14), பசியால் (சரியான ஆவிக்குரிய ஆகாரம் தராததால்), கொழுமையான பதார்த்தங்களை உண்ணவேண்டியவர்கள் (சங். 4:7; ஆமோஸ் 8:11; புல. 4:4,5), இரட்சிப்பின் வஸ்திரம் தரித்திருக்கவேண்டியவர்கள் (ஏசா. 61:10), குப்பையான (உலக மேன்மைகள் பிலி. 3:7) மேடுகளை அணைத்துக்கொண்டு அலைகிறார்களே (புல. 4:5). கற்பை இழந்து அல்லது சூறையாடப்பட்ட நிலையில், கற்பனைகளை மறந்ததினால் துப்புரவு, பரிசுத்தம், அர்ப்பணம் என்பவைகளை உடையவர்களாயிருக்கத் தெரிந்துகொள்ளப்பட்ட இளைய தலைமுறை, இப்பொழுது கறைபட்டு (உலகத்தால், உறவால்) (2 பேது. 3:14; யாக். 1:27; எபே. 4:19), பட்ட மரத்திற்கு ஒப்பாய் மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றே புலம்புகிறான் தீர்க்கன் எரேமியா (புல. 4:7,8). 

சுற்றியுள்ள, நெருங்கி அவர்கள் இருதயத்தினை ஆக்கிரமித்துள்ள Social மீடியாவின் கொடூரமும், மொபைல் போனில் வரும் அசுத்தங்களும், காதல் பாடல்களைப் போல சினிமா பாணியில் வரும் ஆவிக்குரிய உலகு என்று அழைத்துக்கொள்கிற உலகின் இசையை மையப்படுத்தி மாம்ச உணர்வைத் தூண்டிவிடும் பாடல் இசைகளும், வார்த்தைகளும், காதுகளை ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கத்தக்கதாக 24 மணி நேர இசையின் மயக்கம், நடக்கும்போதும், படுக்கும்போதும், வேலை செய்யும் போதும், படிக்கும் போதும் சுற்றியிருப்போரைக் குறித்துக் கரிசனையோ, கவலையோ கொள்ளாமல் செய்துவிடுகிறதே!! 

கூடவே, அனைத்துப் பாடல்களையும் வீடியோ எடுத்து, சினிமாவைக் காட்டிலும் கவர்ச்சியான இடங்களில் பாடல்களுக்கு நடிக்கும் நடிகர்களாக பிரசங்கிகள், வாலிபர்கள், இளம் பெண்களின் நடனமும் (choreography என்ற பெயரில்),  ஆயிரமாயிரமாயிரமான நடிகர்களையே உருவாக்கியிருக்கிறது. இதனைக் கண்ட அநேக போதகர்களும் பாடல் எழுதுகிறோம் என்ற பெயரில். இதனைத்தான் தரிசனத்திலும், நாட்டிலும் கண்ட எரேமியா, பகைவர்களால் சூழ்ந்திருப்பதாகக் கூறுகின்றான் (புல. 4:10-12). 

முதியவரையோ, தேவ சமூகத்தில் நின்று போராடி ஜெபிக்கும் தேவ மனிதர்களையோ அவர்கள் மதிக்காமல், வாய்க்கு வந்தபடி பேசி, ஏளனமாகச் சிரித்து, அதனை YouTube-ல் பதிவிட்டு, உலகத்தில் தங்களுடைய பரிகாசக் கும்பலின் எண்ணிக்கையைப் பெருக்கும் வண்ணம் அந்தச் செய்திகளுக்குத் தலைப்புகளைத் தந்து, சத்தியத்தினைக் கேலிக்கூத்தாக மாற்றுவார்கள் என்பதனை அறிந்தே எரேமியா தீர்க்கமாக எழுதுகிறான் (புல. 4:16). நம்பிக்கை ஒன்றும் இல்லாமல் (சாதாரணமாகத் தற்கொலை செய்துகொள்ளுதல்)  (புல. 4:17) வாழ்கிறார்கள். 

இதிலே, அபிஷேகம் பண்ணப்பட்டவனும் தப்பவில்லை (புல. 4:20). ஆனால், தேவனோ, அவர்களுடைய அக்கிரமத்தினை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார் (புல. 4:22). நியாயத்தீர்ப்பினைக் குறித்த ஒரு தேவ பயமே இல்லாத சந்ததியாக இதனை மாற்றுவதற்கு உதவினவர்கள் யார் தெரியுமா? ஆச்சரியப்படுவீர்கள். 

புலம்பல் 4:13-ல், திட்டமாக இன்றைய ஆவிக்குரிய உலகின் நிலமையே அன்றைக்கும் காணப்பட்டது என்பதனைக் காணலாம். 

'அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் (prophets) பாவங்களினாலும், அதின் ஆசாரியர்களின் (pastors) அக்கிரமங்களினாலும் இப்படியாயிற்று" (புல. 4:13). 

முடிவு என்னவாயிற்று? திக்கற்றவர்களாக மாற்றப்பட்டு (பரம) தகப்பன் இல்லாதவர்களானார்கள் (புல. 5:3). உதடுகளினால் 'அப்பா அப்பா" என்றழைக்கிறார்கள்; ஆனால், அவருக்குக் கொடுக்கவேண்டிய கனம் கொடுக்கப்படவில்லை (மல். 1:6). தங்கள் நடுவில் இருக்கிறார் என்கிறார்கள்; அவரோ, வெளியே தள்ளப்பட்டு, கதவைத் திறவுங்கள் என்று ஏக்கக் குரலில் கெஞ்சி நிற்கிறார் (மத். 15:8; வெளி. 3:20). 

குத்தாட்டம் ஆடச் சொல்லிக்கொடுத்து, Steps-ஐ சினிமா நடிகர்கள் பாணியிலே தாங்கள் கற்றதினைக் கக்கி, அவர்களின் வாந்தியை வாலிபர்களைச் சாப்பிடவைத்து மகிழ்கிறார்கள். இந்த ஆட்டம்தான் (பேயாட்டம்) வாலிபர்களை இழுப்பதாகக் கூறி, தாங்கள் ஏமாந்ததோடு மற்றவர்களை வஞ்சனையாய் ஏமாற்றிப் பிழைக்கிறார்கள்; முடிவு, இளைப்பாறுதல் இல்லை (புல. 5:5). இலவசமாகத் தாகத்தைத் தீர்த்து, பசியைப் போக்கிக்கொள்ள அழைப்பு வருவதனை அறியக்கூடாமல் (ஏசா. 55:1), பணத்தினை சிற்றின்பங்களுக்காகச் செலவிட்டு (ஏசா. 55:2) வேதனைக்குள்ளாகிறது இளைய சமுதாயம்.

அடிமைப்பட்டு (ஆபாசப்படங்களுக்கு, pornography, addictions, drugs-களுக்கு) (புல. 5:6), பணங்கொடுத்து வாங்கின உல்லாசங்களுக்குத் தங்களைத் தத்தம்செய்துள்ளனர் (புல. 5:7). அடிமையிலும் கேவலமான நிலை. சத்துரு பெலம் பொருந்தியவனாகத் தோற்றமளிக்கிறான் (புல. 5:8). தேவனைத் தரிசித்தவன் சிங்கம்போலிருப்பான். நீதியாய் வாழ்கிறவனுக்குப் பயமில்லை (நீதி. 28:1). ஆனால், கள்ளத்தீர்க்கதரிசிகளாலும், போதகர்களாலும் மோசம்போக்கப்பட்டவர்கள், சத்துருவை கோலியாத்தாகத்தானே பார்ப்பார்கள்; ராஜா சவுலைப் போலவே (1 சாமு. 17:33; புல. 5:8). 

உண்மையான ஆனந்த துதி ஒலி (எரே. 30:19) கேட்கக்கூடாதபடி, சத்துருவினிடத்தில் சிறைபட்டுக் கிடக்கிறார்கள் (புல. 5:14). கிரீடமாகிய அபிஷேகத்தினை இழந்து புலம்புகிறார்கள் (லேவி. 21:12). 

பெண்களை எளிதாகக் கற்பழிக்கும் காட்சி ஆலயத்திலும், கூட்டங்களின் மறைவிடங்களிலும், கள்ளப் போதகர்களாலும், வேசித்தன ஆவியினைச் சுமந்து திரியும் வேட்டை நாய்களாலும் நடந்தேறுகிறது (புல. 5:11). 

திராட்சத்தோட்டத்தினைக் கெடுக்கும் குழிநரிகளும், சிறுநரிகளும் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதனைக் கெடுத்துப்போடச் சுற்றித்திரிகின்றன (உன். 2:15; புல. 5:18). இதினிமித்தமே, ஓர் அவலக்குரல் ஒலிக்கிறது. 'பூர்வக்காலத்திலிருந்தது போல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்." (புல. 5:21)

இந்த நிலை மாற, இன்று போதகர்களும், மேய்ப்பர்களும், தீர்க்கதரிசி என்று தன்னை அழைத்துச்கொள்பவரும் மனந்திரும்பிக் கதறவேண்டியது. 'ஆசாரியர்கள் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே அழுது புலம்பினால்தான்" (யோவேல் 2:17) விடுதலை உண்டு (யோவேல் 2:18). 

ஜாய்ஸ் மேயர் அவர்களால் சென்னையில் நடத்தப்பட்ட போதகர்கள் கருத்தரங்கத்தில் நானும் ஓர் செய்தியாளன். அப்போது, இந்தத் தலைமுறையினரை பழக்குவிக்க நான் போதகர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம், ஒரு மனிதனுக்கு டிரைவிங், கார் ஓட்டக் கற்றுக்கொடுப்பது போன்று செயல்படுங்கள் என்று கூறி, முதலாவது அவரை பக்கத்தில் வைத்து நீங்கள் செய்வதனை கவனிக்கச் செய்யுங்கள். பின்னர் ஸ்டெரிங்கை அவர் இயக்க, நீங்கள் accelerator-ல் (முடுக்கி) கால் வைத்து, பிரேக்கையும் இப்போது அவர் காலில் கொடுத்துவிடுங்கள். மூன்றாவதாக, நீங்கள் அருகில் அமர்ந்து ஸ்டெரிங்கைப் பிடித்து அவரை accelerator, brake  முதலானவைகளை இயக்கவையுங்கள். நான்காவதாக, முழுவதும் அவரை இயக்கச் செய்து நீங்கள் பார்த்து ரசியுங்கள். கடைசியாக, பின் சீட்டில் அமர்ந்து நீங்கள் காரில் செல்லமுடியும் என்று விளக்கிக்கொண்டிருந்தேன். 

கூட்ட முடிவில் போதகர் ஸ்டான்லி வாசு, 'அண்ணன், நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான்; ஆனால், காரை இயக்க அவரை அமர்த்திவிட்டு, இறங்கி பின் சீட்டில் அமரப்போகும்போது, கற்றுக்கொண்டவன் காரையே தூக்கிக்கொண்டு ஓடிவிடுகிறான்" என்றாரே பார்க்கவேண்டும். 

இந்த பயத்தில்தான் அநேகர் இளைஞரை உபயோகிக்கவோ, அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவே மறுக்கின்றனர். தங்களைப் பாதுகாப்பற்ற நிலையிலேயே (insecured) பார்க்கின்றனர். 'போனால் போகட்டும் போடா" என்று சொல்ல முடியவில்லை. 

முதிர்ச்சி அடையாத இளந் தலைமுறையினை நம்பமுடியாதுதான் (immatured). அதனைத்தான் பவுல், 'எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்தி சொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம். 

அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்" (கொலோ. 1:28,29) என்று தன்னுடைய ஊழியத்தினைக் குறித்து விளக்குகிறார். இரண்டு வார்த்தைகளை கவனியுங்கள், 'கிறிஸ்துவையே அறிவித்து" 'எனக்குள்ளே கிரியை நடப்பிக்கிற அவருடைய பலம்". 

ஆனால், இவை இரண்டும் இன்றும் அநேக ஊழியங்களில் காணப்படுவதில்லையே. தங்களையே உயர்த்தி தங்கள் மேன்மைகளையே எடுத்துரைத்து, தாங்கள் ஜெபித்ததினால் உண்டான காரியங்களை ஜோடித்துச் சொல்லி, ஆடுவதற்கு எப்படி Step வைக்கவேண்டும் எப்படி உடலை வளைக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்து, அலங்கார மற்றும ஆடம்பர உடை அணிந்து, மொட்டை அடித்து அல்லது முடிந்தால் தலையின் முடி அலங்காரத்தையும் மாற்றி மாற்றி, உடை அலங்காரத்தை சினிமா கதாநாயகர்களைப் போல உடுத்தி, முடிதனை நன்றாக வளர்த்து அதனை நடனமாடச் செய்து டிரம் அடித்து, வாத்தியங்களில் குரங்குதனை ஆட்டுவிக்கும் இசைதனை வாசித்து, வர்ண விளக்குகளையும், நடமாடும் வெளிச்சத்தினையும் காண்பித்து, பாடல் பாடுவோரையோ, பிரசங்கிப்பவரையோ மாத்திரம் பார்க்கச் செய்யும் Search Light போட்டு, இடையிடையே விசில் சத்தத்தினைக் கேட்டு ரசித்து, தேவ வார்த்தையின் ஓரங்களை மாத்திரம் பிடித்து வியாக்கியானம் தந்தால் இளைய தலைமுறை 'தறுதலை"யாகத்தானேப் போகும். அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து காரைக் (ஊழியத்தினைக்) கொடுத்தால், அது இரண்டகம் பண்ணி, துரோகம் செய்து, குழிவெட்டி புதைத்து, பொய்களை வாரியிறைத்து, தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னை பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் என்ற பட்டப்பெயரைப் பெற்று (எபி. 10:29), 

இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழுந்து நூதனமானப் போதனைகளைப் போதிக்கும் போதகனாகி, பிசாசின் கண்ணியில் விழுந்து நிந்திப்பதனைத் தொழிலாகக் கொண்டு (1 தீமோ. 3:6,7), 

எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாதிருக்கிற பெண்பிள்ளைகளை வசப்படுத்தி (2 தீமோ. 3:7).

அந்த 'கிடாரியால் உழுது" (சிம்சோனை அவள் மனைவி அலட்டி, விடுகதையின் பொருளைக் கண்டறிந்தது போல, நல்லவர்களையும் பேதைகளையும் கெடுத்துப்போடுகிறார்கள் (நியா. 14:18).

விழிப்பாயிருக்கிறவர்களோ தேவ பெலத்தினைச் சார்ந்து, அப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டுகொள்கின்றனர். 

இதனை மனதில் கொண்டுதான் நான் கீழ்கண்ட பாடலை எழுதினேன். (மார்ச் மாதத்தில் Youtube-ல் வெளியானது).  


தேவை தேவை தேவை

தேசத்தில் தேவனைக் காண்பிக்கும் மனிதர்கள்

தேவை தேவை தேவை

உம்மோடு உறவாட உள்ளம் துடிக்குதையா

உலகின் உறவைவிட மனமும் மறுக்குதையா


1. கபடமும் கற்பனையும் செய்யும் வேதனையும்

  கல்வாரியில் அனைத்தையும் சிலுவையில் அறைந்திடனும்

                                                        .......... உம்மோடு 

2. நாட்டிலும் சபையிலும் நடக்கும் அசிங்கமெல்லாம்

  கல்மனம் உடைக்கும் கல்வாரியால் அழிந்து தொலைந்திடுமே

                                                     .......... உம்மோடு

3. சுயத்தை சிலுவையில் அறைந்தோர் தேவை இன்று 

  சுற்றாரும் உற்றாரும் உலகமும் இயேசுவைக் கண்டிடனும்

                                                          .......... உம்மோடு

4. தேடிடும் உம் கண்கள் என் மேல் படுகிறதே

  தேய்ந்த உம் கால்கள் என் உள்ளத்தை முழுதும் நொறுக்கிடுதே

                                                                .......... உம்மோடு

  உம்மோடு நடந்திட இதயம் துடிக்குதையா

  உலகத்தின் இழுப்பும் தானாய் மறையுதையா

  உம்மைக் காண்பிக்க இதோ வந்தோமையா

சபையைக் கெடுத்து, இளைஞரை ஆடவிட்டு வேடிக்கைப் பார்க்கும் தேவ ஊழியரே, valentine day (பிப்ரவரி 14-ம் நாள்) உன் தோழனோடோ தோழியோடோ (boy friend or girl friend) கூட்டத்தில் வந்து மகிழ்ந்திரு என்று கூவி கூவி அழைக்கும் அலப்பறைகளே, வாலிபரைக் கண்டுகொள்ளாமல் வந்தால் வா அல்லது போனால் போ என்று கூலிக்கு மாரடிக்கும் போதகர்களே! வாலிபச் செல்வங்களின் திறமைதனைக் கண்டுகொள்ளாத பிஷப்மார்களே, வாலிப ஊழியத்தில் ஈடுபட்டிருந்தாலும் வாலிபருக்குப் பொறுப்புகளைப் பகிர்ந்தளிக்க மனமற்ற முதியவர்களே!! ஆண்டவரின் இதயத் துடிப்புதனை அறியக்கூடாமல் கொள்கைகளில் மயங்கித் திரியும் மதிகேடானக் கூட்டமே, ஆதி அன்பினை இழந்து, ஆயினும் பழைய அனுபவங்களைச் சொல்லி, அதிலே மக்களை மயக்கிவைத்திருக்கும் வேடதாரிகளே, பணம் ஒன்றே குறி என்று வாழும் பலவிதக் கமிட்டியாரே,  சொல்வதனையே மறுபடி மறுபடிச் சொல்லி, வெவ்வேறு இசை மயக்கத்தில் மாய்ந்துபோகும் பாடகரே, நடனப் பயிற்சி தரும் கோமாளிகளே, தாங்கள் ஒன்றும் செய்யாதிருந்தும் திருத்துகிறோம் என்ற பெயரில் உண்மையைத் திரிப்பவர்களே வருகின்ற ஆவிக்குரிய யுத்தத்தையோ, ஆபத்துகளையோ, பெருமழையையோ, பெரும் சூறாவளிக் காற்றையோ, பெரும் வெள்ளத்தையோ உணராதிருக்கிற குரைக்கமாட்டாத ஊமையானதும், குருடானதுமான நாய்கள் என்று ஏசாயா அழைக்கிறாரே (ஏசா. 42:18) அப்படிப்பட்டவர்களே, 

என் தாசனையல்லாமல் குருடன் யார்? நான் அனுப்பின தூதனையல்லாமல் குருடன் யார்? கர்த்தருடைய ஊழியக்காரனையல்லாமல் அந்தகன் யார்? (ஏசா. 42:18,19). தேவன் உங்களைக் குறித்து இப்படிச் சொல்லிவிடக்கூடாது என்பதில் கவனமாயிருங்கள். 

நீ அநேகக் காரியங்களைக் கண்டும் கவனியாதிருக்கிறாய். அவனுக்குச் செவிகளைத் திறந்தாலும் கேளாதேபோகிறான் (ஏசா. 42:20) என்ற அங்கலாய்ப்பு உங்கள் செவிகளைத் திறக்காதோ!!

'அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவாரே." (ஏசா. 42:21)

'தன் நேசர் மேல் சாய்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்?" என்று தேவனை சொல்லுகிறதை என் காதுகள் கேட்கிறது (உன். 8:5). 

கூடவே, 

'உன் குமாரரைக் கொடுங்கையில் ஏந்திக்கொண்டு வருவார்கள். உன் குமாரத்திகள் தோளின் மேல் எடுத்துக்கொண்டுவரப்படுவார்கள்...

ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும் அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்...

எனக்குக் காத்திருப்பவர்கள் வெட்கப்படுவதில்லை...

பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப் பொருளைப் பறிக்கக்கூடுமோ? ...

என்றாலும், இதோ பராக்கிரமனால் சிறைப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்....      (ஏசா. 49:22-25)

என்ற வாக்குத்தத்தங்கள், (இன்றைக்குச் சொல்லப்படும் வருட, மாத, தினசரி வாக்குத்தத்தங்கள் போல் அல்ல) வானத்திலிருந்து பூமியின் மேல் 'காதுள்ளவன் கேட்கக்கடவன்" என்ற முழக்கத் தொனியோடு முழங்குவதனை என் காதுகள் கேட்கிறது (அப். 22:9)

வருகைதனை எதிர்நோக்கிடும்

திரளான கூட்டத்திலே

பிறக்கும் சந்ததியும்

மேல் நோக்கிக் காத்திருக்க

உன்னதப் பெலத்தினால்

நிறைந்த சேனை

எழும்பிடுதே முழங்கிடுமே

   தேவ சேனை ஒன்று எழும்புகிறதே


                                                                          அன்பரின்  அறுவடைப் பணியில்

                                                                      அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்





 

April 2025


கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே, 

'வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவலையில்லையா? (புல. 1:12)" என்று அங்கலாய்த்து, சபை செயல்படாதா? என்று எதிர்பார்த்து நிற்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகள். சபை செயல்படத் துவங்கினால், திறக்கப்படும் கதவுகளுக்குக் கணக்கில்லையே!

யோசுவாவின் காலத்திலேயே சுதந்தரித்திருக்கவேண்டிய வாக்குத்தத்த பூமிக்குள்   'எருசலேம்" சுதந்தரிக்கப்படாமல் இருந்தது. ஏனெனில், யூதாவின் தலைவர்களின் 'அசதி" (யோசு. 18:3). இஸ்ரவேலின் கலப்பு வாழ்க்கை (யோசு. 23:15,16). விளைவு, எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா துரத்திவிடக்கூடாமற்போயிற்று. ஆகையால், அது எபூசியரின் வசத்தில் இருந்தது (யோசு. 15:63). மெல்கிசேதேக் என்னும் இராஜாதான் அப்பகுதிக்கு முந்திய நாட்களில் இராஜா (ஆதி. 14:18-20).

ஆபிரகாம் தன் குமாரனை பலிகொடுக்க தேவனால் குறிக்கப்பட்ட மலையை அடக்கிய இந்த பகுதியை, இப்போது சத்துரு சுதந்தரித்துக்கொண்டிருந்தான் (ஆதி. 22:2,4). பின்னால் தாவீது தன்னுடைய தவறை உணர்ந்து (ஜனங்களை எண்ணிக்கை செய்தது) தேவ கோபத்தினை அமர்த்த [ஏற்கனவே 70000 (எழுபதாயிரம்) கொல்லப்பட்டு வீணாக மரித்துப்போனார்களே! (1 நாளா. 21:14)] பலிசெலுத்தினதும் இதே இடம்தான் (1 நாளா. 21:18). யோசுவா அதின் அதிபதியாயிருந்த அதோனிசேதேக்கின் கையிலிருந்து, சந்திரனையும் சூரியனையும் நிறுத்தி யுத்தம் செய்து பிடித்தது மட்டுமல்லாமல், அவனுடைய கழுத்தின் மேல் உடன் தலைவர்களை கால்களை வைத்து வெற்றியைச் சுகித்த பகுதி (யோசு. 10:1,12,24). ஆனால், இஸ்ரவேலின் 'அசதி" (இன்று சபை இருப்பது போலவே) அதை சத்துருவுக்கு விட்டுக்கொடுத்திருந்தது. கூடவே, அதின் குடிகள் தைரியமாக, குருடரும் சப்பாணிகளும் உங்களைத் தடுப்பார்கள் என்று ஏளனம் செய்யும் அளவுக்கு வளர்ந்திருந்தார்கள் (2 சாமு. 5:6). 

சவுலுக்கு இதனைக் குறித்து ஒரு கவலையுமில்லை. அவனுக்கு தேசத்தை சத்துருவின் கையிலிருந்து காப்பது பெரிதாகத் தோன்றவில்லை; மாறாக, தாவீதை அழிக்கவே தன் இராஜ்யபாரத்தின் அனைத்து காரியங்களை முடுக்கிவிட்டிருந்தான். இன்றைய சபைத் தலைவர்களும் இப்படித்தானே நடந்துகொள்ளுகிறார்கள். தன்னை பாதுகாக்க அனைத்தையும்  (Resources, people & time) செலவழித்துக்கொண்டிருக்கிறார்கள் (1 சாமு. 24:14). 

ஆனால், தாவீதோ, ஆபிரகாமையும், மெல்கிசேதேக்கையும் நினைவுகூர்ந்தவனாக, எந்த கேலிப்பேச்சுக்கும், சத்துருவுக்கும் பயப்படாமல், 'ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று" (2 சாமு. 5:7). 

அதனைப் பிடிக்க தன் ஜனத்திற்கு முன் ஒரு யுத்த முறைமையையும்  (strategy), சவாலையும், வெகுமதியையும் வைக்கிறான் (2 சாமு. 5:8; 1 நாளா. 11:6).  தாவீதின் யுத்த முறைமை, சாலகத்தின் வழியாய் ஏறவேண்டும் என்பது (Gutter in KJV). தேவனை நேசிப்பவனுக்கு, சத்துருவை அடையாளம் கண்டுகொண்டவனுக்கு, சிறிய கதவு திறந்தாலும், அழுக்கிலும், நாற்றத்திலும் இறங்க நேரிட்டாலும் கவலையில்லையே! 

'எருசலேமின் அலங்கத்தைப் பார்

தெருக்களின் அலங்கோலத்தைப் பார்

நொறுங்கி ஜெபித்து விழுந்து அழுது

திரும்ப அலங்கத்தைக் கட்டிடவா"

என்ற பாடல்களின் வரிகளை என்னுடைய கூட்டங்களில் சகோ. ஒண்டே மோசசை பாடவைத்தது, இதுபோன்ற வைராக்கியமுள்ள வாலிபர்களைத் தட்டி எழுப்பத்தான். இன்றும் வாக்களிக்கப்பட்ட தேசம் சத்துருவின் கைகளில் மாட்டிக்கொண்டுள்ளது. இந்தியாவிலும் கையாலாகாதவர்கள் (குருடர், முடவர் போன்ற வக்கற்ற சக்திகள்) ஆக்கிரமித்து வைத்துள்ள ஜனங்களை மீட்க, யோவாபுகளும், உற்சாகப்படுத்தும் தாவீதுகளும் (தலைவர்கள்) வேண்டுமே. ஆனால், ஆவிக்குரிய தலைமைகளோ, சவுலைப் போன்று 'தன் பாதுகாப்பையே குறியாகக் கொண்டு செயல்படுகிறதே! ஐயோ! தேவனே எங்கள் தலைவர்கள் தாங்கள் செய்யவேண்டியதனைக் குறித்து அசதியாயிருக்கிறார்களே. எரே. 48:10-ல் சொல்லப்பட்டது போன்று, 'கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன். இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன்". சாப ஊழியத்தினை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்களோ??

'இடது பக்கத்தில் நிற்பவர்கள் போல, சபிக்கப்பட்டவர்களே என்னை விட்டு பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினிக்குப் போங்கள்" என்று சொல்லிவிடுவாரோ? (மத். 25:41) என்ற அச்சம் எப்போதுமே எனக்கு உண்டு. எரே. 23:1 எசே. 34:2  'மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரை" என்று சொல்லிவிடுவாரோ? 

'கடைசி வார்த்தை" பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகத்தின் முதுஏ என்ற மொழிபெயர்ப்பில்  ('Curse") சாப வார்த்தையோடே முடிகிறது. அந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் மேய்ப்பருக்கே எழுதப்பட்டது அல்லவா (மல். 2:1-8). வார்த்தையை விட்டு விலகின அவர்களின் குறையைச் சுட்டிக்காட்டி, பரிசுத்தக் குலைச்சலையும் சுட்டிக்காட்டி (மல். 2:14-16), சத்துவமற்ற பிரசங்கங்களைக் குறித்தும் (மல். 2:17), காணிக்கைப் பணத்தினை வஞ்சித்து, வேறு காரியத்திற்குச் செலவழித்து வீணடிக்கும் காரியத்திலும் (மல். 3:8,9), கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினால் என்ன பிரயோஜனமென்று ஜனத்தினை திசைதிருப்பும் போதகத்திலும் (உபவாச ஜெபம் தேவையில்லை, ஏன் நீ ஜெபிக்கவே வேண்டாம் என்றும் உபதேசங்கள்) இன்று சபையை நடத்துவோர் பெருகிவருகின்றனர். 

ஆயினும், 'தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும், அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தினை அவர் காண்பிக்கும் நாளிலே அப்படிப்பட்டவர்களை அடையாளம் காட்டிக்கொடுத்துவிடுவார் அல்லவா (மல். 3:17:18).

அமெரிக்க அதிபரின் சில சீர்திருத்த நடவடிக்கையினை (குறிப்பாக தவறான முறையில் தேசத்திற்கு வந்தவர்களைத் திரும்பி அவர்கள் தேசத்திற்கே அனுப்பும், அதுவும் அசிங்கப்படுத்தும் வண்ணம் சங்கிலிகளால் கட்டப்பட்டவர்களாய் அனுப்பும் செயல் போன்றவைகள், மற்ற நாட்டின் தலைவர்களையும் இயக்கிவிடுவதனைக் காணுங்கால் (U.K, Saudi Arabia போன்றவைகள்), அவர் ஜெபத்திற்கும், வேதபுத்தகத்திற்கும் திருப்பும் செயல்கள், 'பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்" என்ற எலியாவின் ஆவியின் பெலத்தில் செயல்படுத்தும் ஒரு மனிதனை தேவன் எழுப்பியுள்ளாரோ?? என்று யோசிக்கவைக்கிறது (மல். 4:5,6). 

கூடவே, அமெரிக்காவில் இனி இரண்டு ஜாதி (ஆண், பெண்) என்று முழங்கி  LGBTQ+- மூக்கை உடைத்ததும், அதற்கு சாதகமாகப் பேசிய போதகரின் உபதேசத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம், சபைக் கட்டிடத்தை விட்டு வெளியேறும் காட்சியும், இராணுவத்தில் ஓரினச் சேர்க்கைக்காரர்களுக்கு இடமில்லை என்று சட்டத்தை இயற்றி, இராணுவத்தையும், செயலற்றுக் கிடக்கும் இலாக்காக்களுடைய அரசாங்கப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிவைப்பதில் கவனம் செலுத்துவதையும் காணுங்கால், அதே காரியம் நம் நாட்டிலும் நடக்காதோ!! என்றே ஏங்கவைக்கிறது. யெகூவைப் போன்ற நடவடிக்கைகள் (தேசத்தின் சுத்திகரிப்பு) தீவிரமாக நடைபெறுகிறது. ஓர் எழுப்புதலுக்கு இது உதவிசெய்யும் அல்லவா. ஏனெனில், எந்த எழுப்புதலும் மனஸ்தாபப்பட்டு, மனந்திரும்பி, விட்டுவிட்டு ஜெபிப்பதிலேயே ஆரம்பிக்கிறது அல்லவா!

அமெரிக்காவில் மக்கள் (இளைஞர் உட்பட) ஆங்காங்கே திரளாகக் கூடி ஜெபிக்கும் காட்சி, எழுப்புதல் அந்த தேசத்தில் உண்டாக வாய்ப்புண்டு என்ற புத்துணர்ச்சியை நமக்குள் உண்டாக்குகிறது அல்லவா!

தேவ சேனை ஒன்று எழும்புகிறதே

உந்தன் சேவைக்கென்று கிளம்புகிறதே

என்று நான் எழுதின பாடலுக்கு மெருகு ஏற்றுகிறது. 

டிரம்ப் மிரட்டல்கள், காஸாவைக் குறித்தும், உக்கிரைனைக் குறித்தும், இந்தியப் பிரதமரை வாயடைக்கும் வழிகளையும் பார்க்கும்போது, நாடுகள் இனி எப்படி பிரதிநடவடிக்கை எடுக்கும்  (Reactionஎன்பது நாடுகளை மீண்டும் கலங்கப்பண்ணலாம். அமெரிக்காவை கிறிஸ்தவ தேசமாகவே மற்ற நாடுகள் பார்க்கவேண்டும். முற்பிதாக்கள் போட்ட அஸ்திபாரமாகிய 'We Trust in Godஎன்ற வாசகமே எங்கும் முழங்கவேண்டும் என்ற விருப்பம் போன்ற அறிக்கைகள் தெய்வீகமானது; நிலைத்திருக்கவேண்டும் 'Back to the Bibleதான் இன்று இந்திய சபைகளுக்கும் தேவை. குப்பைகள் கூடிவிட்டன, குவிந்து நாற்றம் எடுக்கிறது; அகற்றாவிடில் ஆபத்து என்று கூவி அறிவிக்கவேண்டுமே. சபையின் சுத்திகரிப்புதான் தேசத்திற்கு ஷேமத்தைக் கொண்டுவருமென்பது மாறாத பிரமாணம். 

தேசத்தில் கற்பழிப்பு, அவலட்சணமான செயல்கள், சமூக வலைதளங்களில் (Social network) வெளியாகும் ஆபாசப் படைப்புகள், சிறுவர்களும் தங்களுடைய ஆசிரியர்களைக்கூட செக்ஸ் அடையாளமாகவே  (Sex symbolபார்க்க ஆரம்பித்துவிட்ட பொல்லாத காலம். விபத்து ஏற்பட்டால்கூட, சண்டை வந்துவிட்டால்கூட உடனே வீடியோ எடுக்கவேண்டும் என்ற உணர்வே  அநேகரைத் தட்டி எழுப்பிவிட்டிருக்கிறது. உதவிசெய்யத் தீவிரிக்கவேண்டிய கால்கள், கைகளால் செல்போன் தேடப்பட்டு படமாக்கி உடனடியாக வைரலாக்கிவிடத் துடிக்கும் இதயமே இன்றைய இளையதலைமுறையின் இலக்கு. 

கூடவே, போதைப் பொருட்களின் நடமாட்டம். பள்ளிச் சிறுவர்களையும் சீரழிக்க, அதில் கடத்தல் தொழில் ஓகோவென்று நடக்கிறதல்லவா!  445.9 per 1,00,000 ஒருவர் கிரிமினல் கேஸில் மாட்டிக்கொள்கிறார் என்பது, இது பதிவுசெய்யப்பட்டவை மாத்திரமே! 

பெண்பிள்ளைகள் பாதுகாக்கப்பட பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. பள்ளிகள், தெருக்கள், அலுவலகங்கள், பொது இடங்கள் அனைத்திலும்  CCTV  கேமிராக்கள் வைக்கவேண்டிய கட்டாயம். 

பெண்களை மிகவும் போற்றுகிறோம் என்று சொல்லும் பிரதமர், மணிப்பூரில் கிறிஸ்தவப் பெண்களுக்கு நடைபெற்றதனைக் கண்டுகொள்ளவேயில்லை. பெண்களுக்கான இலவசம் கொஞ்சம் கொஞ்சமாகக்கூடிவருகிறது. இலவச பஸ் பயணம் போன்றவை தவறாகவே உபயோகத்தில் உள்ளது! தவறுகளைத் தண்டித்தால் மட்டும் போதுமா! அவைகளின் பிறப்பிடம்வரை அதின் கருவை அறுத்திடவிடாமல் சத்துரு கவனமாயிருக்கிறான். 

ஊடகங்கள், 'எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்கேதுவானதாகவே" காரியங்களைச் செய்துவருகிறது. மனிதனை மிருகமாக மாற்றும் கலை அதற்கு கைவந்தது. அறிவின் கனியைச் சாப்பிடச் சொல்லி ஏவாளை ஏவின சாத்தான், இன்றும் வரும் தலைமுறையை, வேகமாக தேவனையும் பெற்றோரையும் விட்டுப் பிரித்துவிடுவதற்குப் போதுமான வல்லமை பெற்றவன். 

'பாதாளக் குழியைத் திறந்தான் பெருஞ்சூளையிலிருந்து புகை எழும்பிற்று... அந்தப் புகையிலிருந்து புறப்பட்ட வெட்டுக்கிளிகள்" தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரை மாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது... அவைகள் செய்யும் வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போதும் உண்டாகும் வேதனையைப் போலிருக்கும்" (வெளி. 9:4,5); அது இதுதானோ! 

'பொருளாசை என்னும் அரக்கனும்

பொலிவுடனே மனதினை ஆள்கின்றதே

பொல்லாப்புச் செய்யும் கைகளும்

பொய் தீர்க்கதரிசனமும் பெருகிடுதே"

கள்ளரின் உபதேசப் புரட்டலும்

கர்த்தரின் வார்த்தையை மிதிக்கிறதே

கல்வாரி நாயகனின் கதறுதலும்

கவனிப்பாரற்றுப் போகிறதே

என்று நான் 2000 ஆண்டுகள் முடிந்து புதிய ஆயிர ஆண்டுகள் ஆரம்பித்ததில் எழுதின பாடல் இது. 25 ஆண்டுகள் ஆகிவிட்டது, 'சபைகள் இதனை அறிய மறுக்கிறதே". என்றைக்கு இந்த தூங்கும் சபை, உணர்வற்ற சபை தன்னுடைய கடமையை உணர்ந்து செயல்படத் தொடங்கும்?. 

   போர்க்குதிரையினைக் குறித்துப் பேசும் கர்த்தர், 

'அதின் தொண்டையில் குமுறலை வைத்தாரே. ஒரு வெட்டுக்கிளியை மிரட்டுவதுபோல மிரட்டக்கூடாதே. அதின் நாசியின் செருக்கு பயங்கரமாயிருக்குமே. அது தரையிலே தாளடித்து, தன் பலத்தில் களித்து, ஆயுதங்களைத் தரித்தவருக்கு எதிராகப் புறப்படும். அது கலங்காமலும், பட்டயத்துக்குப் பின்வாங்காமலுமிருந்து, பயப்படுதலை அலட்சியம்பண்ணுமே! அம்பறாத்தூணியும், மின்னுகிற ஈட்டியும், கேடகமும் அதின் மேல் கலகலக்கும்போது, கர்வமும் மூர்க்கமுங் கொண்டு தரையை விழுங்கிவிடுகிறதுபோல் அநுமானித்து, எக்காளத்தின் தொனிக்கு அஞ்சாமல் பாயும்.

எக்காளம் தொனிக்கும்போது, அது நிகியென்று கனைக்கும். யுத்தத்தையும், படைத் தலைவரின் ஆர்ப்பரிப்பையும் தூரத்திலிருந்து மோப்பம் பிடிக்கும்" (யோபு 39:19-25).

என்றைக்கு சபை யுத்த குதிரையைப் போல யுத்தத்தின் எதிரியையும் ஆர்ப்பரிப்பையும் தூரத்திலிருந்து மோப்பம் பிடித்து தன்னுடையவர்களை ஆயத்தப்படுத்தும்???

நம்முடைய யுத்தம் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்லவே... வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் உண்டே!! (எபே. 6:12)

தன்னுடைய சபையார், 'தீங்கு நாளிலே அவைகளை எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு" எப்படி பயிற்சி தரப்போகிறார்கள். 

'சிறு குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டுவதுபோல் ஆட்டி, ஆட்டி தூங்கப்பண்ணுவீர்கள்" பாஸ்டர்களே, சுவிசேஷகர்களே, பாடகர்களே, தீர்க்கதரிசிகளே, அப்போஸ்தலர்களே, போதகர்களே!!!

பவுல் மரிக்கப்போகும் தருவாயிலும், தன்னுடைய ஆவிக்குரிய மகனை, 'நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி. நீயும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கனுபவி என்றும் (2 தீமோ. 2:3,4), 'நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கனுபவி" (2 தீமோ. 4:5,6) என்றும் உற்சாகப்படுத்துகிறார். 

என் உடன் ஊழியனும், பிரியமான சகோதரனும் ஆகிய சகோ. சுரேஷ் எழுதி வெளியிட ஆயத்தப்பட்டுக்கொண்டிருக்கும் பாடலோடு முடிக்கிறேன். அவை அர்த்த செரிவுள்ளவை. நம்மை முழங்காலில் தள்ள வல்லவை!

       எழுப்புதல் நாதரின் ஏக்கம்

எழும்பி நீ ஜொலிப்பதே நோக்கம்

உனக்குள் உருவாகும் மாற்றம்

உலகில் உருவாக்கும் தாக்கம் (சபையில், தேசத்தில்)


அர்ப்பணம் அனைத்தும் அகன்றதேன்

அவர் அன்பு உனக்குள் குறைந்ததேன்

ஆவியின் அனலும் அவிந்ததேன்

அபிஷேகமும் உன் வாழ்வில் மறைந்ததேன்


பரலோக மன்னா கசந்ததேன்

பலவித பெலவீனம் வந்ததேன்

பரமனின் பாதம் வெறுத்ததேன்

பரலோக சிந்தை மறந்ததேன்


இரகசிய பாவம் சூழ்ந்ததேன்

இவ்வுலக மோகம் கவர்ந்ததேன்

இருதயம் இருளால் நிறைந்ததேன்

இயேசுவின் சிநேகம் மறைந்ததேன்


திரும்பவும் கட்டிடும் தெய்வமே

தேடிடும் அன்பு நேசரே

தருவாயா திரும்பவும் உன்னையே

தயவாய் தமக்கென்று ஆள்வாரே


அன்பரைப் போல ஜெயம் பெற்ற யுத்தம் செய்யவும்

அவரோடு ஆளும் நாளை வாஞ்சிப்போம்

அதுவே நம் சபைக்குச் செய்தியாகட்டும்

ஆவியானவரின் துணையால் அவருடன் சிங்காசனம் அமருவோம்

                                                       (வெளி. 3:21)



                                                                     அன்பரின் அறுவடைப் பணியில்

                                                                     அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

----------------------------------------------------------------------------------------------

'மகாகும்பமேளாவின் நிகழ்வுகள்'

(பத்திரிக்கைச் செய்திகள்)

----------------------------------------------------------------------------------------------


  1. 65 கோடி மக்கள் குளித்தார்கள் என்ற மாயையான எண்ணிக்கை. அதாவது, 2-ல் 1 இந்தியர் இதில் பங்கேற்றார் என்பது அபத்தம். 
  2. சாது என்று சொல்லும் சிலர், நடுரோட்டில் (கும்பமேளா மைதானத்தில்) கடந்து போகிற எல்லாரையும் சவுக்கால் அடிக்கிறார்கள்| அந்த அடி ஆசீர்வாதமானதாம்.
  3. 'நிர்வாணச் சாமியார்கள்" நடப்பதனைக் கும்பிட்டு வணங்குதல். 
  4. எப்படியாவது 'சங்கமத்தில்" சேர்ந்துவிடவேண்டும் என்று எண்ணி, பீகாரில் A/c கோச்களில் ஜன்னலை அடித்து நொறுக்கி, ஜனங்களை கெட்டவார்த்தை சொல்லித் திட்டி, பாவநிவர்த்திக்காகப் பயணிக்கிறேன் என்று சொல்லும் கூட்டம். 
  5. வாலிபன் ஒருவன், தன்னுடைய காதலியுடன் (அவளின் அம்மாவிடம் அனுமதி பெற்ற பின்னர்)  சங்கமம் செல்கிறான். வரும் வழியில் இருவருக்கும் ஏற்பட்ட தகறாறில், அவளுடைய துப்பட்டாவினால் கழுத்தை நெருக்கிக் கொன்று, பின்னர் அவளுடைய தலையை வெட்டி காட்டில் எறிந்துவிட்டு, சங்கமத்தில் குளித்து 'பாவம் போக்கிக்கொண்டான்" என்கிற செய்தி. 
  6. தம்பதி ஒன்று பாவம் போக்கப் புறப்பட்டுப் போகும் வழியில், மனைவியைக் கொன்று ஆற்றில் வீசிவிட்டு, திரும்ப ஊர் திரும்பி, மனைவி கூட்டத்தில் காணாமல்போய்விட்டதாகக் கூறி மற்றவரை ஏமாற்றியது. 
  7. மிதியுண்டு செத்தோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 100 இருக்க (கண்ணால் கண்டவர்களின் அறிக்கை), 30  பேர் என்று அரசாங்கமே கூறி மறைத்தது. கலவரமாக மாறாமலிருக்க என்று உ.பி முதல்வரே சொல்கிறார். 
  8. டெல்லி இரயில்வே ஸ்டேஷனில் மிதியுண்டு இறந்தவர் எண்ணிக்கை 18 பேர் (குழந்தைகள் உட்பட). 
  9. பிரயாணத்தில் ஏற்பட்ட விபத்துகளிலும் இறந்தவர் எண்ணிக்கை ஏராளம். 
  10. கஞ்சா போன்ற போதை பொருட்களைத் தாராளமாக உபயோகிக்கும் சாதுக்களின் கண்காட்சிகள். 
  11. இது 'கண்மூடித்தன பக்தி" என்று ஒரு கூடாரத்தின் வாசலில் எழுதி தொங்கவிட்டவர், நன்றாக அடிக்கப்பட்டார் இந்த 'பரமாத்துமாக்களினால்". 
  12. வரும் வழியில் 'வேப்பங் குச்சிகளைக்" கட்டி ஒருவன் விற்றுக்கொண்டிருக்கிறான். ஒரு 'Bundle" எவ்வளவு என்று காரில் வந்த ஒருவர் கேட்க, அவன் அது Rs.. 10000 என்கிறான் (ஏன் 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் Rs. 50 - Rs.. 100 வரை விற்கப்பட்டதே). அதனை வாங்கி தன் காரில் வைத்துக்கொண்டுபோய், சின்னக் குச்சிகளாக வெட்டி, ஒன்று Rs.. 10 என்று விற்க, அவருக்குக் கிடைத்தது Rs. 1 லட்சம். என்னே! இலாபம்!! புத்திசாலிதானே. 
  13. மஹராஷ்டிராவில் ஒரு கம்பெனி, 'உங்கள் புகைப்படத்தினைத் தாருங்கள், நாங்கள் அதனை கங்கையில் முழுக்கித் தருகிறோம்; ஏன் அங்கே போய் அவஸ்தைப்படவேண்டும் என்று விளம்பரப்படுத்தி, அதனை செய்துதருவதற்கு Rs.. 1100 கட்டணம் வைத்ததனை நம்பி, தங்களின் Photo அனுப்பிவித்து 'மோட்சம் செல்ல வழியைத் தேடினவர்களும்" உண்டு. 
  14. மற்றொருவன் Video Call-ல் படத்தினைப் பெற்று, தன் phone-ஐ கங்கையில் முக்கி எடுத்து, வரமுடியாதவர்களுக்காக மூழ்கி எழுந்தான். அதனை வேறொருவரால் வீடியோ எடுக்கவைத்து அதனை கட்டணம் செலுத்தியவர்களுக்கு அனுப்பிவைத்தனர். 
  15. ஒரு கலசத்தில் கங்கை நீரை சங்கமத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், சில பட்டணங்களில் இருக்கும் நீச்சல் குளத்தில் ஊற்றி, அதில் மூழ்கினால் 'முக்தி" என்று சொன்ன வியாபாரமும் நடந்தது. 
  16. பெண்கள் உடைமாற்றும் அறையில் திருட்டுத்தனமாக சாமியார் படம் எடுக்க முயன்றார்; அதனால், கைதுசெய்யப்பட்டார். 
  17. சேற்றிலேயே உருண்டு புரண்டு கங்கையைத் தொட்டவர்களும் உண்டு. 
  18. அதில் ஓடும் சாக்கடைத் தண்ணீரில் முக்கி ஒருவர் முள்ளங்கி சாப்பிடுகிறார். 
  19. இந்த விழாவினால் கங்கை நதியில் குளிப்பதற்கு தண்ணீர் தகுதியற்றதாகிறது என்று ஆய்வுக்கூட அறிக்கை (10 மடங்கு). 
  20. இதில் கலந்துகொண்டுவந்த அநேகர் தோல் வியாதியோடு GEMS ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்தார்கள். 
  21. இந்தியாவின் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர், அம்பானியின் குடும்பம், அநேக சினிமா நட்சத்திரங்கள் என மேலிருப்பவர்களும், குஷ்டரோகிகளும் சேர்ந்தே இதில் மூழ்கி எழுந்தனர். 
  22. பிறப்புச் சக்கரத்திலிருந்து விடுதலை வேண்டும் என்றுதானே வந்தார்கள். ஆனால், அடுத்த ஜென்மமாவது நன்றாக அமையவேண்டும் என்றே பலர் பிராத்தனை செய்தனர். 
  23. இந்த விழாவினை, 'லல்லு பிரசாத்" இது வீணானது (Faltu) என்றார். மம்தா பானர்ஜியோ 'மரண மேளா" என்றார். கூடவே 144 வருடத்திற்கு ஒருமுறை என்று கூறுவது 'தவறு" என்றார். அகிலேஷ் யாதவும் இதனை 'ராவணன்" வேடம் உ.பி முதல்வர் அணிந்திருக்கிறார் என்றார். 
  24. அரசாங்கங்கள் அநேக 'கள்ள" விளம்பரங்களையும், தகவல்களையும் தந்து மக்களை வஞ்சிக்கிறது. ஒன்றிய அரசும், உ.பி அரசும் இணைந்து செய்யும் இந்தத் திட்டம், இந்துக்களின் உணர்வைத் தூண்டிவிட்டு, மற்றவர்களுக்கு அவர்களைச் சத்துருவாக்கி, அதிக ஓட்டுகளைப் பெற்று ஆட்சியில் அசையாமல்  அமர்ந்து இந்த தேசத்தின் அரசியல் சட்டத்தினை மாற்றி, ரஷ்யாவையோ அல்லது சீனாவைப் போல மாறிவிடவேண்டும் என்பதே (ஒரு கட்சி, ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு தேர்தல் என்பவை போன்றவை).
  25. கும்பமேளாவில் உ.பி-யின் பொருளாதாரம் உயர்ந்தது (அது மக்களிடம் உறிந்து எடுத்ததினால் உண்டானது). அதன் மயக்கம் உ.பி. முதல்வரை, தொடர்ந்து 5 இடங்களில் அப்படிப்பட்டக் காரியத்தினை நடப்பித்து, தன்னை இந்த நாட்டுக்குத் தேவையான பிரதமராக மாற்றப் போதுமான 'இந்துத்துவத்தின்" கொள்கையைக் கொண்டு முன்னேற முயன்றுவர வைத்திருக்கிறது. 
  26. 170 படகுகள் மூலம் நாளொன்றுக்கு ஒரு படகுக்கு                            RS. 50,000 - Rs.52,000 வரை சம்பாத்தியம் கிடைத்தது என்று பெருமைப்பட்டுக்கொண்டார் உ.பி முதல்வர். 
  27. மகா கும்பமேளா காரணமாக, கடன்களை விநியோகிக்கக்கூட வங்கிகளிடம் போதுமானப் பணம் இல்லை (SBI அறிக்கை).


அன்று எருசலேமின் நிலையைக் கேட்ட 

நெகேமியாவை, அழுது, உபவாசித்து, 

தேவனை நோக்கி மன்றாடச் செய்தது. 

இன்றும் செய்தியைக் கேட்கும் 

நாம் என்ன செய்கிறோம்...???









March 2025

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,


நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும், சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன் (எசே. 22:30) என்று ஏங்கும் தேவனுடைய நாமத்தில் வாழ்த்துகள். தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, அவருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறதே (2 நாளா. 16:9). அவர் நம்மையும் கணக்கில் சேர்த்துக்கொள்ளத்தக்க இடத்தில் தேவன் நம் ஒவ்வொருவரையும் நிறுத்துவாராக! 


'பாவம் பெருகுதே பாரும் பரன் இயேசுவே

அழியும் மனுக்குலம் அதையும் இரட்சிப்பீரே


ஆத்தும இரட்சிப்பிழந்தவர் ஆயிரம் ஆயிரமாய்

அன்றாடகம் இந்த மண்ணடியில் அழிந்து சாகின்றாரே'


என்று புலம்பினார்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு சகோதரி சாராள் நௌரோஜி. ஆனால், இன்றைக்கோ, ஆசீர்வாதப் பாடல்களும், அனுதின ஜீவியத்தில் ஆறுதல் பெற ஏவும்; பாடல்களும், அன்றாட வாழ்க்கையின் தேவைகளையே சுற்றி வலம் வரும் வார்த்தை ஜாலங்களும், இசை என்ற பெயரில் மனிதர்களை மயக்கத்தில் ஆழ்த்தும் பாடல்களும், இசையையே மையமாகக் கொண்டு தேவ ஜனங்களின் உணர்ச்சிகளைத் தட்டிவிடும் பாடல்களும் ஆவிக்குரிய உலகினைச் சீரழித்துவிட்டன. அவை ஜனத்தினை வேறு இயேசுவிடமும், வேறு சுவிசேஷத்திடமும், வேறு ஆவியின் கிரியைகளை வாஞ்சிக்கும் வாழ்க்கைக்கும் தள்ளிவிட்டுவிட்டது (2 கொரி. 11:3,4). 

இந்த ஆண்டினை பல பிரபலங்கள் 'ஆசீர்வாத மழை பொழியும்' என்றே ஜனத்தினை நம்பச் செய்ய முயற்சி எடுக்கிறார்கள். ஆனால், சுற்றிலும் நடக்கும் காரியங்களை உற்றுநோக்கினால், இவர்கள் கள்ளர்கள் என்பதும், சுய ஆதாயத்தினைக் கருத்தில் கொண்டே, தெரிந்தே இதனைச் செய்கிறார்களென்பதும், சுற்றி நடப்பவைகளைக் குறித்து உணர்வற்றவர்களாக இருக்கிறார்கள் (மத். 24:37-39) என்பதும் தெளிவு. சிலவற்றைப் பார்ப்போம். 


1. சுற்றிலும் நடப்பவை குழப்பமானவைகளே!


ஒன்றைக் குறித்து ஒருமித்த கருத்தோ, தெளிவான விடைகளோ, அரசியலிலும், ஆளுமையிலும் (புழஎநசயெnஉந), ஆன்மீகத்திலும், சபையிலும், சங்கத்திலும், நகரத்திலும், கிராமத்திலும், பொருளாதார உலகிலும், மருத்துவ உலகிலும், டெக்னிக்கல் உலகிலும் காணப்படவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 

ஆனால், 'உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்' (ஏசா. 26:3) என்பதுதான் ஏசாயா தீர்க்கனின் உறுதியான அறிக்கை. அதனைக் கூறி அறிவிக்க அழைக்கப்பட்டவர்கள், சிறியோர் முதல் பெரியோர் மட்டும், ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர், இதுவுமல்லாமல், தீர்க்கதரிசிகள் முதல் ஆசாரியர்கள் மட்டும் ஒவ்வொருவரும் பொய்யர். சமாதானமில்லாதிருந்தும், சமாதானம் சமாதானம் என்று சொல்லி என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள் (எரே. 6:14; 8:11; 8:15; 14:13; 23:17).

என் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும் இந்த ஜனத்தைவிட்டு எடுத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரே. 16:5). எனவே, சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும், நரகத்திற்குத் தீவிரிக்கும் ஜனத்தின் மேல் பொழியவேண்டி தேவ ஜனத்தினைக் கதறவைக்கிற உண்மையான தீர்க்கதரிசிகளை தேவன் எழுப்புவாராக!  

கிருபையை தவறாகப் புரிந்துகொண்ட ஒரு பெருங்கூட்டப் பிரசங்கிகளும், பாடகர்களும், போதகர்களும், தீர்க்கதரிசிகளும், தரிசனக்காரர்களும், அகற்றப்படவோ அல்லது மனந்திரும்பவோ கட்டாயப்படுத்திக் கடிந்துகொண்டு புத்திசொல்லும் மூத்த ஊழியர்கள் இன்று அதிகமான தேவை (2 தீமோ. 4:3-5; தீத்து 2:15; சங். 141:5; மீகா 3:8; நீதி. 27:5; நீதி. 1:23).


2. பக்திமார்க்கத்தாரின் குருட்டாட்டம்


இன்று இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் (கிட்டத்தட்ட 45 கோடி மக்கள்), கங்கையும், யமுனாவும், சரஸ்வதி என்ற மர்ம நதியும் இணையும் அலகாபாத்தில், 144 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் 'மகா கும்பு' என்ற விழாவில் மூழ்கினார்கள் என்பது செய்தியாய் மாத்திரம் இருந்துவிட்டதோ? அவர்களின் நோக்கங்கள் இரண்டு: 1) பாவங்கள் கழுவப்படவேண்டும் 2) பிறப்புச் சக்கரத்தில் இருந்து விடுதலை பெறவேண்டும். 

அநேகர் மிதிபட்டு நதியோரத்திலும், ரயில் நிலையங்களிலும், வழியில் ஏற்பட்ட வாகன விபத்துகளிலும் செத்து மடிந்தாலும், இந்த தாகத்தினைத் தடுக்கமுடியவில்லை. 

அவர்கள் தேடுகிற இந்த இரண்டினையும் நம்முடைய இரட்சகராகிய இயேசுவில் நாம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாமே (தீத்து 3:4-7; 1 கொரி. 6:8-11).  இது உரக்கக் கூறி தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் கேட்கப்பண்ணவேண்டியது, அதுவும் அவசரமாக நமது மேல் விழுந்த பெரும் கடமையல்லவோ (1 கொரி. 9:10).

இதற்காக ஜெபிக்கும் ஒரு சேனையை எழுப்பிடத் தவறவிட்டுவிட்டோமே! தேர்தல் காலத்தில் ஜெபித்த ஜெபத்தில், மூன்றில் ஒன்று (பிரதமர் திரு. மோடியும், உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷாவும், அம்பானியும், ஜனாதிபதி திருமதி திரவுபதி முர்முவும், சாதாரண மனிதனும் நிர்வாணச் சாமியார்களின் களியாட்டங்களின் மத்தியில் மூழ்கி எழுந்தனர். பீகாரிலும், உ.பியிலும் போக்குவரத்தில் ஏற்பட்டத் தொல்லைகளை 45 நாட்கள் நாங்கள் அனுபவித்தோம்) கூட ஏறெடுக்கப்படவில்லையே!

'வாலிபன் ஒருவன் தன் தோழியை அவளுடைய தாயின் அனுமதியோடு இதில் பங்குபெற தன்னுடைய மோட்டார் சைக்கிளில் கொண்டுவந்தான். வரும் வழியில் அவளின் துப்பட்டாவை வைத்து கழுத்தை இறுக்கிக் கொன்று, கழுத்தை வெட்டி காட்டில் எறிந்துவிட்டு, அந்த பாவம் போக கங்கையில் நீராடினான்' என்பது செய்தி. இவை நம்மை அசைக்காவிடில் நாம் இரட்சிக்கப்பட்டவர்கள்தானா என்பது கேள்விக்குறியாகிறது??? ஏதோ ஒரு மாயையைப் பின்பற்றி நம்மை இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்வது வெட்கக்கேடு!!

'இவர்கள் பேசாதிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்...

நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்n;பாழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது' (லூக். 19:40-42) என்றாரே இயேசு. 

மஹாராஷ்டிராவின் மந்திரி இன்னும் ஒருபடி மேலே போய், மக்களைப் பார்த்து, 'நீங்கள் மகா கும்பத்திற்குப் போய் கஷ்டப்படவேண்டிய அவசியமில்லை. உங்கள் புகைப்படத்தினைத் தாருங்கள் நாங்கள் அதனை கங்கையில் முழுக்கி உங்களுக்குத் தருகிறோம் என்றார்; எத்தனை அபத்தம்!!

       'கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார்

புண்ணிய ஷேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார்

கவலைப்படுவார் யார்? கண்ணீர் சிந்துவார் யார்?

நம்மில் யார் யார் யாரோ?

திறப்பிலே யார் யார் யாரோ?'

என்று புலம்பினார் அண்ணன் பேட்ரிக் ஜோஷ்வா! 

       'பெலத்தின் மேல் பெலன் பெருகிடும் 

கிருபையின் மேல் கிருபை பெருகிடும்

ஜெபத்தினால் ஜெபத்தினால்

காத்திருந்து சுதந்தரிப்போம்' 

என்ற இரகசியத்தினையும் சொல்லிச் சென்றாரே. 


3. இந்தியப் பொருளாதாரம்

திருமதி நிர்மலா சீத்தாராமனின் பட்ஜெட்டோ, நம்முடைய இன்றைய ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கையோ, பிரதமர் திரு. மோடி மாநில முதல்வர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் இந்தியாவுக்குள் அநேக பணம் படைத்தோரைக் கொண்டுவரச் செய்கிறதோ, பகட்டாகக் கூறி அறிவிக்கப்பட்டாலும், விளம்பரம் அதனைக் குறித்துச் செய்யப்பட்டாலும், நடக்கும் ஊழலும், மாற்றோரின் கருத்துகளைப் புறக்கணிக்கும் ஆளுகை செய்வோராலும், நம் நாட்டில் ஏழைக்கும் வசதிபடைத்தோருக்கும் இடைவெளியைப் பெருக்கவே வேகமாக செய்துவருகிறது. கூடவே, திருட்டும், கொள்ளையும், அதனைத் தொடர்ந்த கொலைகளும்தானே பெருகியிருக்கிறது. தங்களுடைய பொய்யான வாக்குறுதிகள் மூலம், பேச்சுத்திறன் மூலம், விளம்பரத்தின் மூலம் ஜனத்தினை ஒருவித மயக்கத்தில் தள்ளிவிட்ட நம்முடைய தலைவர்கள் செய்த தீங்கு நம் நாட்டை குழிக்குள் தள்ளிவிட்டுவிட்டது. 5 Trillion டாலர் அளவுக்கு இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்திவிடுவோம் என்று அடிக்கடி பிரதமர் திரு. மோடியும் அவருடைய சகாக்களும் கூறி முழங்கிட்டாலும், 3 Trillion டாலர்தான் தற்போது நமது நிலை. உலகிற்கு இந்திய பொருளாதாரம் தருவது வெறும் 3.5%; ஆனால், 26% தரும் அமெரிக்காவும் 16% தரும் சைனாவும்தான் நமக்குப் போட்டி என்று கூறுவது அர்த்தமற்றது. தன்னை 'விஷ்வ குரு' என்று நினைத்து செயல்படும் இந்தியப் பிரதமர் 2047-ல் நாம் சைனாவை முந்திவிடுவோம் என்று சொல்வது வெறும் பகல் கனவு என்பதனை அறிந்தவர் யார்? 

'இந்தியா செழிக்கவேண்டும்' என்பது நம்முடைய ஜெபம்தான்; ஆனால், தேவனுக்குப் பயப்படக்கூடிய தலைவர்கள் இல்லையே. மாய வார்த்தைகளையே நம்முடைய ஆவிக்குரிய தலைவர்கள் பொய்யாய்க் கூறி, அலப்பி, ஜனத்திற்கு உண்மையைக் கூறத் தவறிவிட்டார்கள். 

'என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன்'  (2 நாளா. 7:14) என்பது மாறாத தேவ எதிர்பார்ப்பு அல்லவோ!

இந்த வசனத்தை அடிக்கடி உபயோகப்படுத்தும் பிரசங்கிகளும், அநேகந்தரம் கள்ளத் தீர்க்கர்களை அடையாளம் கண்டுகொண்டபோதிலும், தங்களின் செல்வாக்கை மாத்திரம் மனதில் வைத்து, அப்படிப்பட்டவர்களோடு கொஞ்சிக் குலாவி, மக்களை ஏமாற்றிவிடுகிறார்களே. கூடவே, அவர்களைப் புகழ்ந்து போற்றி மேடையை அலங்கரித்து பரிசுத்த ஸ்தலங்களைப் பாழாக்கிவிட்டனரே. 

ஜனங்களும், 'ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள்போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப் போகிறது. 

இதோ, நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்குச் சமானமாயிருக்கிறாய்; அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவைகளின்படி செய்யாமற்போகிறார்கள் (எசே. 33:31,32) என்ற வசனத்திற்கு ஒத்தாற்போல்தான் இருக்கிறார்கள். எனவே, தேசத்தில் செழுமை என்பது காணக்கூடாததே. 

'FDI (Foreign direct investment) ஆயிரமாயிரமான கோடிகள் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டும், 'நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்' (ஆகாய் 1:6). மாற்றுமருந்தாக 'உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்' (ஆகாய் 1:7). 

'அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்' (ஆகாய் 1:9) என்றுதானே ஆண்டவர் கூறுகிறார். 

ஏழைக்கும் பணக்காரனுக்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரம். 52% மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே. 5% மக்கள் கையிலே இந்தியாவின் 40% சொத்து. மத்திய வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் உயர ஏராளமான கடன்கள் வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டு, அனைவரையும் கடனாளியாக்க, எடுக்கும் முயற்சிகளோடு, ஒவ்வொரு இந்தியன் தலையின் மேலும் 2.5 லட்சம் ரூபாய் கடன். பிறக்கும் குழந்தைக்கும் இது பொருந்தும். 

கடன் தள்ளுபடியோ பணம்படைத்தவர்களுக்கே! ஆனால், ஆவிக்குரிய மக்கள் என்று தன்னை அழைத்துக்கொள்ளுவோர் மத்தியில் திருமணத்திலும், விழாக்களிலும், உணவு விடுதிகளிலும் செலவு செய்யப்படும் பணம் அநேக நேரங்களில் கண்ணீரையே வரவழைக்கிறது. 

இந்திய பணமதிப்பு சரிந்துகொண்டேபோவதால், விலைவாசிகளைக் கட்டுப்படுத்த முடியாமல், வரிக்கு மேல் வரி விதித்து எளியவர்களை திக்குமுக்காடவே செய்துவருகிறது அரசாங்கம். 


4. Deportation from other countries (நாட்டை விட்டுத் துரத்தப்படுதல்)

உலகின் மாயையில் சிக்கிய ஜனம் மேலைநாடுகளுக்கு எப்படியாகிலும் சென்றுவிடவேண்டும் என்று துடிப்பதால் உண்டானதுதான், திருட்டுத்தனமாக அப்படிப்பட்ட நாடுகளில் குடியேற முயற்சித்தது. ஆனால், 1 கோடி வரை ஏஜென்ட்டுகளுக்கு பணம் கொடுத்தோர் கைகளிலும், இடுப்புகளிலும், கால்களிலும் விலங்கிடப்பட்டு, இராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பப்படும் காட்சி அதிர்ச்சியையும், கண்ணீரையுமே வரவழைக்கிறது. இருந்த பணத்தையும் இழந்தனர் (அநேகர் கடன் பெற்றே சென்றவர்கள்).  ஐயோ! என் ஜனமே!!

'அவர்களில் பிரபலமானவர்கள் தங்கள் சிறுவர்களைத் தண்ணீருக்கு அனுப்புகிறார்கள்; இவர்கள் பள்ளங்களுக்குப் போய்த் தண்ணீரைக் காணாமல் வெறும் பாத்திரங்களோடே திரும்பிவருகிறார்கள்; வெட்கி நாணி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்' (எரே. 14:3).

'கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்' (நீதி 10:22) என்பதனை தேசத்தின் மக்களுக்குச் சொல்வது யார்? 

கீழ்கண்ட பாடல் என் உதடுகளில் தொனித்தது (அதனை லுழரவுரடிந-ல் நீங்கள் கேட்கலாம்). எனவே, உணர்வோம் கடமைதனை; செயல்படுவோம்; மற்றவற்றை அடுத்த மடலில் எழுதுகிறேன். 


தேவை தேவை தேவை

தேசத்தில் மக்கள் தேவனை அறிந்திட

தேவை தேவை தேவை


உம்மோடு உறவாட உள்ளம் துடிக்குதையா!

உலகின் உறவைவிட மனமும் மறுக்குதையா!


1. கபமும் கற்பனையும் செய்யும் வேதனையும் 

கல்வாரியில் அனைத்தையும் சிலுவையில் அறைந்திடனும்

......... உம்மோடு 

2. நாட்டிலும் சபையிலும் நடக்கும் அசிங்கமெல்லாம்

கல்மனம் உடைக்கும் கல்வாரியால் அழிந்து தொலைந்திடுமே

......... உம்மோடு 

3. சுயத்தை சிலுவையில் அறைந்தோர் தேவை இன்று

சுற்றோரும் உற்றோரும் உலகமும் இயேசுவைக் கண்டிடணும்

......... உம்மோடு 

4. தேடிடும் உம் கண்கள் என் மேலே படுகிறதே

தேய்ந்த உம் கால்கள் என் உள்ளத்தை முழுதும் நொறுக்கிடுதே


உம்மோடு நடந்திட இதயம் துடிக்குதையா

உலகத்தின் இழுப்பும் தானாய் மறையுதையா

            அன்பரின் அறுவடைப் பணியில்

அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

===============================