அன்பின் மடல்
சூரைச்செடி நிழலிலும் கப்பலின் அடித்தட்டிலும் தட்டி எழுப்புகிறவரும், மகிமையையும் சுரமண்டலத்தையும் விழித்தெழச் செய்கிறவரும், எழும்புகிறவர்களைப் பிரகாசிக்கச் செய்கிறவரும், உறங்காதவரும்
தூங்காதவருமாகிய இஸ்ரவேலின் தேவனின் நாமத்தில் வாழ்த்துகள். (1இராஜாக்கள் 19:7; யோனா 1:6; சங்கீதம் 57:8; எபேசியர் 5:14; சங்கீதம் 121:4)
'விழித்தெழும் சபை" என்பது இம்மடலின் தலைப்பு.
விழிப்பைப் பற்றி பைபிளில் முதல் குறிப்பு :- ஆதியாகமம் 9:24 ல் வருகிறது.'நோவா திராட்சை ரசத்தின் வெறி தெளிந்து விழித்தபோது, தன் இளைய குமாரன் தனக்குச் செய்ததை அறிந்து ..."
விழிப்பு அறிவைக் கொண்டுவருகிறது. தான் விழிப்பு இல்லாமல் இருந்தபோது, தனக்கு என்ன நடந்தது என்பது, விழிப்பின்போதுதான்
தெரியவருகிறது. நோவா வஸ்திரம் விலகிக் கிடந்தது, அவன் விழித்தபோது தான் அவனுக்குத் தெரிந்தது.
வெளிப்படுத்தல் 3:17-18 'நீ நிர்வாணிமாய் இருக்கிறதை அறியாமல் எனக்கு ஒரு குறைவும் இல்லை என்றும் சொல்லுகிறபடியால்.. உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக் கொள்வதற்கு வெண்வஸ்திரங்களை என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும் வேண்டும் என்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்."
எனக்கு ஒரு குறைவும் இல்லை என்று, விழிப்புள்ள சபை சொல்லாது. குறைவு உண்டு; ஆனாலும், கிறிஸ்து குறைவை நிறைவாக்குவார் என்று விழிப்பு சொல்லும்.
1)எபேசு சபையின் குறை:- ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டது (வெளிப்படுத்தல் 2:4).
2)சிமிர்னா சபையின் குறை:- ஆவிக்குரிய தரித்திரம் (வெளிப்படுத்தல் 2:9).
3)பெர்கமு சபையின் குறை:- பிலேயாமின் போதகம் மற்றும் நிக்கோலாய் மதஸ்தரின் போதகம் (வெளிப்படுத்தல் 2:14,15).
4)தீயத்தீரா சபையின் குறை:- யேசபேலின் வஞ்சகம் (வெளிப்படுத்தல் 2:25).
5)சர்தை சபையின் குறை:- செத்த நிலை, நிறைவற்றக் கிரியைகள், அசுசிப்பட்ட வஸ்திரம் (வெளிப்படுத்தல் 3:2,4).
6)பிலதெல்பியா சபையின் குறை:- கொஞ்சம் பெலன் (வெளிப்படுத்தல் 3:8).
7)லவோதிக்கேயா சபையின் குறை:- வெதுவெதுப்பு, நிர்ப்பாக்கியம், பரிதாப நிலை, தரித்திரம், குருட்டுத்தனம், நிர்வாணம்.
பைபிள் கால சபையாகிய எபேசு சபையிலேயே குறை இருந்தது. மிகச்சிறந்த சபையாகிய பிலதெல்பியாவுக்கு பெலன் குறைவாக இருந்தது. 'தன் பிழைகளை உணர்கிறவன் யார்?"(சங்கீதம்19:12).
'எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்து அறிந்து..." நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நியாயம் தீர்க்கப்படோம்"(1கொரிந்தியர் 11:28,31).
சபை கூடுதலின் நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானதாகவும் பரிசுத்தமானதாகவும் கருதப்படுவது திருவிருந்து ஆராதனை. அதன் முக்கியமான அம்சம், தன்னைத்தானே சோதித்து அறிதலும், நம்மை நாமே நிதானித்து அறிதலும்.
வசனம் 28:- 'தன்னைத் தானே" என்பது தனிப்பட்ட நபரைக் குறிக்கிறது.
வசனம் 31:- 'நம்மை நாமே" என்பது முழு சபையையே குறிக்கிறது. சபை தனது நிறைகளையும், பிறரது குறைகளையும் மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பது, விழிப்பு இல்லை.
பாரம்பரிய சபைகளின் நிர்வாகத்தில் உள்ள ஊழியக்காரர்களும் மற்றும் விசுவாசிகளும் எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்கிறார்கள். ஏனெனில்,
தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆகவே, இரண்டு அணிகள் உருவாகிறது. ஒருவரை ஒருவர் அரசியல்வாதிகளை விட மோசமாகத் தாக்கிக்கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் கூட எப்போதாவதுதான் நீதிமன்றத்தை அணுகுகிறார்கள். எந்த கட்சியையாவது, கட்சிக்கு சம்பந்தம் இல்லாத நீதிபதிகள் நிர்வகித்ததாக, வரலாறு உண்டா? ஆனால், இங்கு கிறிஸ்தவ சபைகளின் நிர்வாகத்தை கிறிஸ்தவர் அல்லாத நீதிபதிகள் நிர்வகிக்கிற நிலை. அவர்களிடமும்,
இரண்டு அணியினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி புகார்களைக் கொடுக்கிறார்கள்.
ஒரு பாரம்பரிய சபையின், ஒரு மாவட்ட நிர்வாகம், அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட கணக்கு அறிக்கையின்படி, அதன் பத்தாண்டுகளுக்கான நீதிமன்றச் செலவு மட்டும் 55 கோடி ரூபாய். இது மாவட்ட நிர்வாகம் மட்டும் செலவு செய்த தொகை. அம்மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களும், சமூக சேவை நிறுவனங்களும், மருத்துவ அமைப்புகளும், நீதிமன்றங்களுக்குச் செலவு செய்தது இதில் அடங்காது. அதைவிட மோசமானக் காரியம், கோடி கோடியாக லஞ்சம் கொடுத்தது அந்தத் தொகையை விட மிக மிக அதிகம்.
இந்தச் செலவுகளுக்காக, சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள நிறுவனங்களில் பணியாளர் நியமனத்தின் போது, பல லட்சம் ரூபாய் பணம் வாங்குகிறார்கள். அதில் ஒரு சிறு பகுதி மட்டும், சபையின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு நன்கொடையாகக் கணக்கு வைக்கப்படுகிறது. பெரும்பகுதிப் பணம், கணக்கில் காட்ட முடியாத நீதிமன்றச் செலவுகளுக்கும், அரசு அதிகாரிகளுக்குக் கொடுப்பதற்கும் பயன்படுவதாகச் சொல்கிறார்கள். (அரசு அதிகாரிகள் வாங்குவதைவிட, வேலை வாய்ப்புக்காக நாங்கள் குறைவாகவே வாங்குகிறோம், என்கிற பெருமை வேறு).
பல ஆண்டுகள் தற்காலிகப் பணியில் இருந்த விதவை ஒருவர், தனது சொத்துக்களை விற்று பல லட்ச ரூபாய் வேலை வாய்ப்புக்காகத் தர முன்வந்தார். ஆனால், அதைவிட கால் பகுதி அதிக பணம் கொடுத்த ஒரு பணக்காரருக்கு, ஏல முறையில் அந்த வேலையைக் கொடுத்து விட்டார்கள்.
இந்த நடவடிக்கைகளில் விசுவாசிகள் மட்டுமல்ல ஊழியக்காரர்களும் பகிரங்கமாகவும் வெளியரங்கமாகவும் ஈடுபடுவது வேதனை. சபையே! கர்த்தர் உன்னை சவுக்கு எடுத்து விளாசுவதற்கு முன்பு, நீ பதவிப்
போதையில் இருந்தும், பணப் போதையில் இருந்தும் விடுபட்டு, விழிப்புள்ள சபையாக ஆகமாட்டாயா?
அச்சபையின் தலைவர்களிடம் இது குறித்து நான் விவாதித்துள்ளேன். நிர்வாகிகளை போட்டியின்றி தெரிந்தெடுப்பது, சீட்டுப் போட்டு தெரிந்தெடுப்பது, ஆகிய முறைகளை பின்பற்றலாமே என கருத்து தெரிவித்தேன்.
'வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்கள் இடத்தில் போகாமல் அநீதக்காரர் இடத்தில் போகத் துணிகிறது என்ன?
நீங்கள் ஒருவரோடு ஒருவர் வழக்காடுகிறது எல்லா விதத்திலும் குற்றமாய் இருக்கின்றது. அப்படி செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தை சகித்துக்கொள்கிறது இல்லை? ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்கிறது இல்லை? (1கொரிந்தியர் 6 :1-7).
ஆவிக்குரியச் சபைகள் என்று அழைக்கப்படும் சுயாதீனச் சபைகளும் தங்கள் குறைகளை உணரவேண்டியது அவசியம். கணக்கு ஒப்புவிக்கும் நிலை மற்றும் பதில் சொல்லும் நிலை இன்றி, ஒரு ஊழியக்காரனே சர்வாதிகாரியாகத் திகழ்வது, வேதத்திற்கு ஏற்றதல்ல. பைபிள் கூட்டுத் தலைமையையும், குழு செயல்பாட்டையும் பரிந்துரைக்கிறது.
'அப்பொழுது பேதுரு பதினொருவரோடும் கூட நின்று" (அப்போஸ்தலர் 2:14),
'அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து" (அப்போஸ்தலர் 6:2),
'அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள்" (அப்போஸ்தலர் 8:14),
'அந்தியோகியா பட்டணத்தில் உள்ள சபையில் பர்னபாவும் சிமியோனும் லூகியும் மனாயீனும் சவுலும் தீர்க்கதரிசிகளாகவும் போதகர்களாகவும் இருந்தார்கள்" (அப்போஸ்தலர் 13:1),
பவுலும் சில்வானும் தீமோத்தேயுவும் தெசலோனிக்கே சபைக்கு எழுதுகிறதாவது" (2தெச. 2:1).
ஒரு சுயாதீனச் சபையின் நிறுவனரும் மற்றும் தலைவருமாகிய ஊழியக்காரனின் குடும்பத்தில் பிரச்சனை. அதைப்பற்றி அவர் சபையாரிடம் தெரிவிக்கவில்லை. அதைப்பற்றி அறிந்த மூத்த ஊழியக்காரர்கள் அவரிடம் தொடர்புகொண்டபோது, 'இது எனது தனிப்பட்ட வாழ்வு, இதில் தலையிடாதீர்கள்", என்று கூறிவிட்டார். தனது குடும்பப் பிரச்சனையை அவர் அணுகிய முறை, வசனத்துக்கும் சமூகத்துக்கும் முரணான ஒன்று. அது சபை ஆராதனையில் வெடித்தது, இந்த சபை நடக்காமல் மூடப்பட்டுவிட்டது.
வசனத்துக்கும், சமூகத்துக்கும், சட்டத்துக்கும் முரணான அணுகுமுறையைக் கையாண்டுவிட்டு, 'கர்த்தர் என்னோடு இருக்கிறார், என்னைப் பற்றி பேசுகிறவர்களைக் கர்த்தர் அடிப்பார்" என்று பகிரங்கமாகத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார். யாருக்கும் பதில் சொல்லவோ, தேவ மனிதர்களின் ஆலோசனையைக் கேட்கவோ அவர் ஆயத்தமாய் இல்லை. அது ஒரு தனி நபரின் காரியமோ, குடும்பத்தின் காரியமோ அல்ல, சபையின் பிரச்சனை. ஒரு தனிப்பட்ட ஊழியக்காரரைப் பற்றியது அல்ல. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இது போன்ற பல சபைத் தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இவர் ஒரு அடையாளம்.
இரண்டாவதாக,
'அவர்களால் (கீழ்ப்படியாமையின் பிள்ளைகளால்) ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாய் இருக்கிறதே.
ஆதலால், தூங்குகிற நீ விழித்து மரித்தோரை விட்டு எழுந்திரு. அப்போது கிறிஸ்து உன்னை பிரகாசிப்பிப்பார் என்று சொல்லியிருக்கிறார். (எபேசியர் 5 :12-17)
விழித்த பிறகு செய்யவேண்டியது எழும்புவது. அதையே 'எழுப்புதல்" என்று அழைக்கிறோம். 'கிறிஸ்துவுக்குள் பிரகாசிப்பது" என்று அதற்கு அவ்வசனம் விளக்கம் கூறுகிறது.
எழுப்புதல் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் எல்லாரும் வாஞ்சித்து கதறுகின்ற ஒரு கனவு. ஆனால், எழுப்புதலுக்கு கொடுக்கப்படுகிற வியாக்கியானமே வேறுபடுகிறது.
எபேசுவில் ஏற்பட்ட எழுப்புதல் அப்போஸ்தலர் 19-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது:-
1) அது 12 விசுவாசிகளிலிருந்து ஆரம்பிக்கிறது. பரிசுத்த ஆவியைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப்பெற்றார்கள்.(வசனம் 1-7)
2)யூதர்கள் நடுவே பிரசங்கிக்கப்பட்டு, ஒரு கூட்டம் மக்கள் சீஷராக்கப்படுகிறார்கள். (வசனம் 8-9) எல்லா யூதரும் அல்ல.
3)2 வருஷ காலத்தில் அப்பகுதியில் குடியிருந்த எல்லாரும் வசனத்தை கேட்டார்கள். (வசனம் 10) எல்லாரும் இரட்சிக்கப்படவில்லை, பலர் இரட்சிக்கப்பட்டார்கள்.
4)அற்புதங்கள் நடந்தன, வியாதிகளும் பொல்லாத ஆவிகளும் நீங்கின. (வசனம் 11- 12)
5)மந்திரவாதிகளும் இயேசுவின் நாமத்தைப் பயன்படுத்துகிற அளவுக்கு தேவ நாமம் மகிமைப்பட்டது (வசனம் 13-7). ஆனால், மந்திரவாதிகள் மனம் திரும்பவில்லை.
6)மாய வித்தைக்காரர் இரட்சிக்கப்பட்டு பகிரங்கமாக அறிக்கையிட்டார்கள். (வசனம் 18-20)
7)விக்கிரக ஆராதனை குறைந்துபோனது. (வசனம் 24-27) ஆனால், பட்டணத்தில் கலவரம் பண்ணுகிற அளவுக்கு விக்கிரக ஆராதனைக்காரர்கள் இருக்கவே செய்தனர்.
'இந்த எழுப்புதல் மைனர் ஆசியா பகுதியில் மட்டுமே நடந்தது. உலக அளவில் நடக்கவில்லை.
'கிபி 100 வாக்கில், யோவான் வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதும்போது, எபேசு சபை ஆதி அன்பை இழந்திருந்தது. எனவே எழுப்புதல் நிரந்தரமானது அல்ல. (வெளிப்படுத்தல் 2 :4)
'கடைசி கால எழுப்புதல் என்பது உலகளாவியதும் அல்ல, நிரந்தரமானதும் அல்ல.
'(மத்தேயு 24:14)" ராஜ்ஜியத்தினுடைய இந்த சுவிசேஷம் பூலோகம் எங்கும் உள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும். அப்பொழுது முடிவு வரும்.
இவ்வசனத்தின்படி மனுக்குலம் முழுமைக்கும் நற்செய்தி அறிவிக்கப்படுகின்ற போது பெரிய சுவிசேஷமயமாக்கல் நடைபெறும். இது 18 வது மற்றும் 19 வது நூற்றாண்டுகளில் மிஷனரி ஊழியங்களின் எழுச்சியாக உலக அளவில் தொடங்கியது. இதை சபை வரலாற்றாளர்கள் 'பெரிய விழிப்புணர்ச்சி" (புசநயவ யுறயமநniபெ ) என்று அழைக்கிறார்கள்.
'(அப்போஸ்தலர் 8:4) சிதறிப் போனவர்கள் எங்கும் திரிந்து சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்.
(அப்போஸ்தலர் 11:19-20) ஸ்தேவான் நிமித்தமாய் எழும்பின உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் சுவிசேஷ வசனத்தை யூதருக்கே அன்றி, மற்ற ஒருவருக்கும் அறிவியாமல் பெனிக்கே நாடு, சீப்புருத்தீவு, அந்தியோகியா பட்டணம் வரைக்கும் சுற்றித் திரிந்தார்கள். அவர்களின் சீப்புரு தீவாரும் சிரேனே பட்டணத்தருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்திற்கு வந்து, கிரேக்கருடனே பேசி, கர்த்தராகிய இயேசுவைக் குறித்துப் பிரசங்கித்தார்கள்."
வரலாற்றில் சமீபத்தில் நடைபெற்ற எழுப்புதல். அசூசா தெரு எழுப்புதல். அது அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் 1906 லிருந்து 1915 வரை நடைபெற்றது. இரட்சிப்பு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மற்றும் பரிசுத்தமாக்கப்படுதல், என்பதே இந்த எழுப்புதலின் மையப் புள்ளிகள். அந்நியபாஷை பேசுதல், அற்புதங்கள், தெய்வீகச் சுகங்கள் ஆகியன சேர்ந்துகொண்டன. இந்த எழுப்புதல் தீயை ஒரு ஆஸ்திரேலியா
மிஷனரி இலங்கைக்குக் கொண்டுசென்றார். அப்பொழுது அங்கிருந்த இந்திய மிஷனரி பால் ராமன் குட்டிக்கு அது பரவியது. அவர் அதை கேரளாவுக்கு எடுத்து வந்தார். அதுதான் தி பெந்தேகோஸ்தே மிஷனின் துவக்கம். பெந்தகோஸ்தே சபைகள் இந்தியாவில் வருவதற்கு அந்த இரண்டு மிஷனரிகளும், பின்னால் இந்தியாவுக்கு வந்த அமெரிக்க ஏஜி மிஷனரியும், சர்ச் ஆப் காட் அமெரிக்க மிஷனரியும் காரணமானார்கள். மிஷனரிகளால் இந்தியாவில் மூட்டப்பட்ட பெந்தேகோஸ்தே அக்கினியை, பெரிய கட்டடத்துக்குள்ளும், மெகா சபைக்குள்ளும் அடக்கி வைக்கலாமா? சிறிய நெருப்பு பெரிய காட்டைக் கொளுத்துவதற்கு, 'மிஷனரி பணி" என்னும் தீப்பந்தம் தேவை! தேவை!!
ஜெபம் அடிப்படை. ஆனால் ஜெபம் மட்டும் போதாது. போ, சீஷராக்கு, ஞானஸ்நானம் கொடு, உபதேசம் பண்ணு என்பது மகா கட்டளையின் நான்கு அம்சங்கள். உபவாச ஜெபம், இரவு ஜெபம், 10 நாள் ஜெபம், 21 நாள் ஜெபம், 40 நாள் ஜெபம், 50 நாள் ஜெபம், ஓராண்டு ஜெபம், ஆயிரம் நாள் ஜெபம், சங்கிலி ஜெபம், காணொளி ஜெபம் என்று சபை என்னும் விமானம் தரையிலேயே ஓடிக்கொண்டிருந்தால் போதுமா? அது மேல் எழும்பிப் பறக்கவேண்டாமா?
சபையே கூடி களித்தது போதும். ஜெபித்ததற்கு பதிலை பெறுவதற்கு, போய் அறிவி. கற்றதைக் கண்டடைய எழும்பி ஆத்துமாக்களைத் தேடு.
சபையே நீ பாய்ந்தால் பாலசிங்கம்
மடங்கிப் படுத்தால் கிழவரின் சங்கம்
விழி - எழு வேட்டையாடு எங்கும்
ஒளி வந்தது வழி பிறந்தது பொங்கி எழு
விழித்தெழும்பி பாடு சிறைக் கதவு திறக்கும்
சிறையாக்கினோர் மீது சிலுவைக் கொடி பறக்கும்
பணம் பிள்ளைகள் கனவு வருவது உறக்கம்
தேவசாயலின் தரிசனம் வந்தால்தான் சிறக்கும்
வீணை போன்ற மனமே விழி சீக்கிரம்
ஜாதி ஜனங்களுக்குள் நீ அறிவிக்கும் பாத்திரம்
தேவ சமூகத்தில் நித்தம் விழித்திரு
எங்கு போக வேண்டும் என்று அறிந்திடு
கண்ணீரின் ஊழியத்தை கருத்துடன் நினைத்திடு
வாங்குவது பாக்கியமல்ல தாங்கிடு கொடுத்திடு
பாவ மயக்கம் விடு நீதியிலே விழி
தெளிந்திடு அறியாதவரைப் பற்றி புரிந்திடு
விசுவாசத்தில் விழித்திடு விடாமல் நிலைத்திடு
வளர்ந்திடு வலுப்பெறு திடமாக நிமிர்ந்திடு
நான்கு பேரை நடத்திடு நாதரைப் போல் ஆக்கிடு
உத்தரவாதம் தந்திடு உற்சாகமாய்ச் செய்திடு
கெட்டச் சிங்கம் என கெர்ச்சிக்கும் சத்துரு
சுற்றுவது விழுங்கவே தெளிவுடன் விழித்திரு
செத்தக் கிரியை சரியாக்கு சீராக்கு
கள்ளனைப் போலக் கர்த்தர் வருகிறார் விழித்திரு.
அன்பரின் அறுவடைப் பணியில்
அன்பு சகோதரன் M. பிரைட் கென்னடி